எனக்கு பார்வை வரப்போகிறது பாடகி வைக்கம் விஜயலட்சுமி மகிழ்ச்சி
வைக்கம் விஜயலட்சுமி தனக்கு அளிக்கப்பட்டு உள்ள விசேஷ சிகிச்சை மூலம் அடுத்த வருடம் பார்வை கிடைக்கப் போவதாக தெரிவித்தார்.
கேரளாவை சேர்ந்த பிரபல சினிமா பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி. இவர் பிருதிவிராஜ் நடித்த ஜே.சி. டேனியல் படத்தில் இடம்பெற்ற காற்றே காற்றே பாடல் மூலம் தமிழிலும் பாடகியாக அறிமுகமானார். பின்னர் ‘வீர சிவாஜி’ படத்தில் பாடிய ‘சொப்பன சுந்தரி நான்தானே’ பாடல் மேலும் அவரை பிரபலப்படுத்தியது.
பார்வையற்றவரான விஜயலட்சுமியின் வாழ்க்கை சினிமா படமாகிறது. இதில் வைக்கம் விஜயலட்சுமி கதாபாத்திரத்தில் கேரளாவில் மீன் விற்று படித்து பிரபலமான ஹனன் நடிக்கிறார். வைக்கம் விஜயலட்சுமிக்கும், மிமிக்ரி கலைஞரான அனூப்புக்கும் வருகிற 22-ந் தேதி திருமணம் நடக்க உள்ளது.
இந்த நிலையில் வைக்கம் விஜயலட்சுமி தனக்கு அளிக்கப்பட்டு உள்ள விசேஷ சிகிச்சை மூலம் அடுத்த வருடம் பார்வை கிடைக்கப் போவதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
“எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கண்பார்வை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டே இருந்தேன். இதற்காக நிறைய பரிசோதனைகள் செய்து சிகிச்சைகள் எடுத்துக்கொண்டேன். அமெரிக்காவில் சென்று சிகிச்சை எடுத்தேன். அங்குள்ள டாக்டர்கள் நவீன டெக்னாலஜி மூலம் சிகிச்சை அளித்தார்கள்.
அடுத்த வருடம் எனக்கு பார்வை வந்துவிடும் என்று சொல்லி இருக்கிறார்கள். இப்போது எனக்கு வெளிச்சத்தை உணர முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story