பாலியல் பலாத்கார புகார்: நானா படேகர், அலோக் நாத் நடிக்க தடை?


பாலியல் பலாத்கார புகார்: நானா படேகர், அலோக் நாத் நடிக்க தடை?
x
தினத்தந்தி 11 Oct 2018 10:45 PM GMT (Updated: 11 Oct 2018 5:26 PM GMT)

பிரபல இந்தி நடிகர்கள் நானா படேகர், அலோக் நாத் இருவரும் பாலியல் புகாரில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நானா படேகர் 2008-ம் ஆண்டு ‘ஹார்ன் ஓகே ப்ளஸ்’ இந்தி படப்பிடிப்பில் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக நடிகை தனுஸ்ரீதத்தா தெரிவித்தார். இவர் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர்.

தனுஸ்ரீதத்தா கூறும்போது, “பாடல் காட்சியொன்றை படமாக்கியபோது நானா படேகர் அத்துமீறி நுழைந்து பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து நான் வெளியே கூறியதால் அவரது ஆட்கள் என்னை மிரட்டினார்கள். குடும்பத்தோடு காரில் சென்றபோதும் தாக்கப்பட்டேன்” என்றார்.

இதுபோல் நடிகர் அலோக் நாத் மீது பெண் டைரக்டர் வின்டா நந்தா பாலியல் புகார் தெரிவித்தார். அவர் கூறும்போது “ஒரு விருந்து நிகழ்ச்சியில் மதுவில் ஏதோ கலந்து எனக்கு கொடுத்தனர். பின்னர் அலோக் நாத் அவரது காரில் என்னை வீட்டில் விடுவதாக அழைத்துச்சென்றார். அப்போது எனது வாயில் மேலும் மது ஊற்றி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்” என்றார்.

இதைத்தொடர்ந்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சம்மேளனம் பாலியல் புகாருக்கு 10 நாட்களில் விளக்கம் அளிக்கும்படி நானா படேகருக்கும், அலோக் நாத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதன்பிறகு இருவரும் சினிமாவில் நடிக்க தடை விதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று சம்மேளன நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story