பாலியல் புகாரில் சிக்கிய 2 வில்லன் நடிகர்கள்


பாலியல் புகாரில் சிக்கிய 2 வில்லன் நடிகர்கள்
x
தினத்தந்தி 11 Oct 2018 11:30 PM GMT (Updated: 11 Oct 2018 5:53 PM GMT)

வில்லன் நடிகர்கள் ஜான் விஜய், கல்யாண் ஆகியோர் பாலியல் புகாரில் சிக்கியுள்ளனர்.

பாலியல் புகார் கூறிய பாடகி சின்மயிக்கு அது குறித்த விவரங்களை பலர் அனுப்பி வருகிறார்கள்.

இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரும் பெயர் குறிப்பிடாமல் நடன இயக்குனரும் கல்லூரி வாசல், சிட்டிசன், வா டீல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வில்லன் நடிகருமான கல்யாண் பாலியல் தொல்லை கொடுத்த விவரத்தை அனுப்பி உள்ளார்.

அதை சின்மயி டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில் இலங்கை பெண் கூறியிருப்பதாவது:-

“நான் இப்போது கொழும்பில் வசிக்கிறேன். எனக்கு நடனம் பிடிக்கும். தமிழ் சினிமாவில் டான்சராகும் ஆசையில் 2010-ல் சென்னை வந்தேன். டான்ஸ் மாஸ்டர் கல்யாணை சந்தித்து அவருடன் நடனம் ஆடினேன். அப்போது அவர் என்னை கண்ட இடத்தில் தொட்டார். உடனே ஆடுவதை நிறுத்தி விட்டேன்.

எனது போன் நம்பரை வாங்கி அன்று இரவே போன் செய்தார். அவருக்கு உதவியாளராக இருக்க வேண்டுமானால் அவரோடு படுக்க வேண்டும் என்றார். நான் அதிர்ந்துபோனேன். எனது கனவுகள் சிதைந்து போனதை உணர்ந்தேன். திறமையை மட்டும் நம்பி சினிமாவில் இருக்க முடியாது என்று உணர்ந்து இலங்கைக்கே திரும்பி விட்டேன்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுபோல் கபாலி, சாமி-2, ராவணன், கோ உள்பட பல படங்களில் நடித்துள்ள வில்லன் நடிகர் ஜான் விஜய் மீது ஒரு பெண் தெரிவித்துள்ள பாலியல் புகாரை பெங்களூருவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சந்தியா மேனன் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். ஒரு பண்ணை வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் ஜான் விஜய் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றும், அவரை மற்ற பெண்கள் துணையுடன் விரட்டினேன் என்றும் அந்த பெண் அதில் கூறியுள்ளார்.

விருந்தில் தடை செய்யப்பட்ட கொகைன் போதைப்பொருள் தாராளமாக பயன்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை ஜான் விஜய் மறுத்துள்ளார். இந்த புகார்கள் தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Next Story