‘‘பாலியல் தொல்லைகளுக்கு ஆதாரம் கேட்பதா?’’ –பாடகி சின்மயி


‘‘பாலியல் தொல்லைகளுக்கு ஆதாரம் கேட்பதா?’’ –பாடகி சின்மயி
x
தினத்தந்தி 12 Oct 2018 11:30 PM GMT (Updated: 12 Oct 2018 7:32 PM GMT)

பாலியல் புகார் கூறி பரபரப்பான சினிமா பின்னணி பாடகி சின்மயி நேற்று தனது முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பில் தோன்றி பேசினார்.

பாலியல் புகார் பற்றி பாடகி சின்மயி கூறியதாவது:–

‘‘கவிஞர் வைரமுத்து என்னிடம் தவறாக நடக்க முயன்றது உண்மை தான். சுரேஷ் வீட்டில் இருந்தவர்களுக்கு இது தெரியும். இவ்வளவு சம்பவத்துக்கு பிறகும் வைரமுத்துவை ஏன் திருமணத்துக்கு அழைத்தீர்கள்? என்று கேட்கிறார்கள். திருமண அழைப்பிதழ்களை கொடுத்த மக்கள் தொடர்பாளர்களிடம் வைரமுத்துவை கூப்பிட இஷ்டமில்லை என்று எப்படி கூற முடியும். 

ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன. பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசுகிறோம். ஆனால், ஆண் குழந்தைகளுக்கு நேர்ந்ததை சொல்வது இல்லை.

பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள் வெட்கப்பட வேண்டும். நான் வெட்கப்பட மாட்டேன். ‘மீ டூ’ மூலம் பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகம் வெளிவருகின்றன. பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதை வெளிப்படுத்த அவர்களுக்கு தைரியம் இல்லை. நான் ஒழுங்கான பெண்ணா என்பவர்கள் முதலில் அவர்கள் ஒழுங்கானவர்களா? என்று பார்க்க வேண்டும். என்னை குடும்பத்தினர் பார்த்துக்கொள்வார்கள். 

என் துறையில் உள்ள பாலியல் குற்றத்தை வெளியில் கொண்டு வந்ததற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். பாலியல் புகார்களுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். அதை எப்படி பெண்களால் தர முடியும். தவறுகளை தெரிவித்தாலோ, தட்டி கேட்டாலோ அந்த பெண்களின் நோக்கம் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள்’’.

இவ்வாறு சின்மயி கூறியுள்ளார்.

Next Story