சினிமாவில் பலாத்காரம் இல்லை: “பாலியல் சம்பவங்கள் சம்மதத்துடன்தான் நடக்கிறது” - நடிகை ஷில்பா ஷிண்டே


சினிமாவில் பலாத்காரம் இல்லை: “பாலியல் சம்பவங்கள் சம்மதத்துடன்தான் நடக்கிறது” - நடிகை ஷில்பா ஷிண்டே
x
தினத்தந்தி 15 Oct 2018 10:15 PM GMT (Updated: 15 Oct 2018 9:22 PM GMT)

பாலியல் சம்பவங்கள் சம்மதத்துடன்தான் நடக்கிறது நடிகை ஷில்பா ஷிண்டே தெரிவித்துள்ளார்.


இந்தி நடிகை ஷில்பா ஷிண்டே சினிமாவில் பலாத்காரம் இல்லை என்றும், சம்மதத்துடன்தான் எல்லாம் நடக்கிறது என்றும் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“மீ டூவில் பாலியல் பற்றி பேசுவது அபத்தமாக உள்ளது. பாலியல் தொல்லையில் சிக்கினால் அப்போதே சொல்ல வேண்டும். பல ஆண்டுகள் கழித்து தாமதமாக குரல் கொடுத்தால் யாரும் கேட்கப்போவது இல்லை. எல்லா இடங்களிலும் பாலியல் தொல்லைகள் இருக்கின்றன. ஆனால் சினிமா துறையின் பெயரை கெடுப்பதுபோல் பேசுகிறார்கள்.

சினிமா துறை மோசமானது அல்ல. நல்ல துறைதான். சினிமா துறையில் இருக்கும் எல்லோரும் மோசமானவர்கள் இல்லை. இங்கு நடப்பது கொடுத்து வாங்குவது. யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை. சினிமாவில் பாலியல் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. எல்லாமே இருதரப்பினரின் சம்மதத்துடன்தான் நடக்கிறது.

உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் விலகிவிட வேண்டும். அதை விட்டு புகார் தெரிவிப்பது முறையல்ல.” என்று ஷில்பா ஷிண்டே கூறினார்.


Next Story