வாய்ப்புக்காக சமரசமா? - ‘சுசிலீக்ஸ்’ புகாருக்கு பாடகி சின்மயி விளக்கம்


வாய்ப்புக்காக சமரசமா? - ‘சுசிலீக்ஸ்’ புகாருக்கு பாடகி சின்மயி விளக்கம்
x
தினத்தந்தி 15 Oct 2018 11:15 PM GMT (Updated: 15 Oct 2018 10:03 PM GMT)

வாய்ப்புக்காக சமரசமா என, சுசிலீக்ஸ் புகார் தொடர்பாக பாடகி சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.


கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

சின்மயி நடத்தை குறித்து சுசிலீக்ஸில் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. வாய்ப்புக்காக சமரசம் செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை சிலர் சமூக வலைத்தளங்களில் இப்போது பகிர்ந்து சின்மயியை விமர்சித்தனர். அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும்படியும் கேட்டனர்.

இதைத்தொடர்ந்து சின்மயி தனது விளக்கத்தை வீடியோ ஒன்றில் பேசி வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“கடந்த ஒன்றரை வருடமாக கொச்சை மனம் கொண்ட சிலர் சுசித்ரா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்குமாறு கொச்சை வார்த்தைகள் மூலம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். அந்த குற்றச்சாட்டுகளை அப்போதே நான் மறுத்து இருக்கிறேன்.

சுசித்ரா மனநிலை சரியில்லாமல் அப்படி பேசுகிறார் என்று நான் கூறியிருந்தேன். அப்போது சுசித்ராவும் வருத்தம் தெரிவித்து எனக்கு இமெயில் அனுப்பினார். அந்த இமெயில் தகவலை வெளியிட்டு என்னை குற்றமற்றவளாக நிரூபிக்க எனக்கு 2 நிமிடங்கள் போதும். ஆனால் தனிப்பட்ட முறையில் வந்த இமெயிலை வெளியிட நான் விரும்பவில்லை.

சுசித்ரா கணவர் கார்த்திக் டுவிட்டரில், சின்மயி மீது சுசித்ரா சுமத்திய குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் மனநிலை சரியில்லாத நேரத்தில் சுசித்ரா சுமத்திய குற்றங்கள் அவை என்றும் விளக்கம் அளித்துள்ளார். நானும் அந்த டுவிட்டர் தகவலை பகிர்ந்துள்ளேன். நான் என் தொழிலில் முன்னேற என்னென்ன சமரசங்கள் செய்தேன் என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு இதுவே எனது பதிலாகும்.”

இவ்வாறு சின்மயி கூறியுள்ளார்.


Next Story