மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு : பெண் இயக்குனர் பாலியல் புகாருக்கு சுசிகணேசன் மறுப்பு


மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு : பெண் இயக்குனர் பாலியல் புகாருக்கு சுசிகணேசன் மறுப்பு
x
தினத்தந்தி 16 Oct 2018 11:45 PM GMT (Updated: 16 Oct 2018 6:44 PM GMT)

டைரக்டர் சுசிகணேசன் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் இயக்குனர் லீனா மணிமேகலை புகார் கூறி இருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து சுசிகணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘‘உங்கள் அருவருப்பான பொய் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. இந்த உலகம் பொறுக்கிகளுக்கும், போக்கிரிகளுக்கும் உகந்தது என்பதை நிரூபித்து விட்டீர்கள். உங்களோடு சகதியில் உருண்டு இருந்தால், ஒருவேளை இந்த பழியிலிருந்து என் பெயர் விடுபட்டிருக்குமோ? அரை மணி பேட்டிக்கு அறிமுகமான முதல் அறிமுகத்திலேயே, ஒருவர் தனியாக காரில் ஏறச்சொன்னால் ஏறிக்கொள்ளும் புதுமைப் பெண்ணான நீங்கள், கத்தியை அந்த அப்பாவி (ஆடம்பரக் கார் வைத்திருந்தவன் எவனோ) நெஞ்சில் சொருகியிருந்தால் நீங்கள் உண்மையானவர்.

அத்தைனையும் பொய் மூட்டைகள் என்பதை நிருபிக்க ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அவற்றை வெளியிடுவதற்கு முன் என்னை கொச்சைப் படுத்திய அதே பக்கத்தில் உன் மன்னிப்பை கோருகிறேன். இல்லையென்றால் கோர்ட்டு மூலமாக மான நஷ்ட வழக்கு தொடர்ந்து வருகிற தொகையை, உன்னைப் போன்ற மீ டூ இயக்கத்தை சுய பழிவாங்கலுக்கு பயன்படுத்தும் ‘சமுதாய வைரஸ்களை’ களை எடுப்பதற்கு பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

சமூக வலைத்தள நண்பர்களுக்கு, தயவு செய்து மீ டூ இயக்கத்தை திசைதிருப்பும் இதுபோன்ற வக்ர புத்தி கொண்டவர்களை அடையாளம் கண்டு தவிருங்கள். லீலா மணிமேகலை என்னிடம் கேட்டது இரண்டு உதவிகள். உதவி இயக்குனர், பாடல் ஆசிரியர். இரண்டும் என்னால் செய்ய முடியவில்லை.

குடும்ப வாழ்க்கையில் தோற்று, கவிஞர் வாழ்க்கையும் கிட்டாத நிலையில், சினிமா உலகம் அறியும் அழுக்குகள் நிறைந்த அவரது சொந்த வாழ்க்கையில் காரி துப்பமுடியாமல், ஏனோ என்மீது வன்மத்தை துப்பியிருக்கிறார். கற்பு என்பது இரு பாலருக்கும் பொதுவானது. எனது கற்பை சூறையாடியிருக்கிறார். என் குடும்பம், வேதனையோடு வடிக்கும் கண்ணீரை கோர்ட்டு மூலம் கழுவும் வரை எந்த பக்கமும் சாய்ந்துவிடாமல் காத்திருங்கள்.’’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story