நடிகர் ஆலோக் நாத் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு கூறிய இயக்குநர் வின்டா போலீசில் புகார்


நடிகர் ஆலோக் நாத் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு கூறிய இயக்குநர் வின்டா போலீசில் புகார்
x
தினத்தந்தி 17 Oct 2018 1:30 PM GMT (Updated: 17 Oct 2018 1:30 PM GMT)

பிரபல நடிகர் ஆலோக் நாத் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு கூறிய பெண் இயக்குநர் வின்டா நந்தா போலீசில் இன்று புகார் அளித்துள்ளார்.

மும்பை,

இந்தி திரையுலகில் பிரபல நடிகரான ஆலோக் நாத் 19 வருடங்களுக்கு முன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இயக்குனரும், எழுத்தாளருமான வின்டா நந்தா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வின்டா முகநூல் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு பார்ட்டிக்கு என்னை ஒருவர் அழைத்தார். அவரின் மனைவியான என் நெருங்கிய தோழி ஊரில் இல்லை. ஆனால் தியேட்டர் குரூப்பை சேர்ந்தவர்கள் அடிக்கடி சந்திப்பதால் எனக்கு சந்தேகம் ஏற்படவில்லை. பார்ட்டிக்கு சென்ற இடத்தில் எனக்கு மதுவில் ஏதோ கலந்து விட்டார்கள். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. இரவு 2 மணிக்கு அந்த வீட்டில் இருந்து கிளம்பினேன். என்னை யாருமே டிராப் செய்யவில்லை. அது எனக்கு வித்தியாசமாக இருந்தது.

இரவு நேரத்தில் ஆள் இல்லாத தெருவில் நடந்தபோது ஒருவர் தன் காரில் வந்து என்னை வீட்டில் டிராப் செய்வதாக கூறினார். நானும் அவரை நம்பி காரில் ஏறினேன். அதன் பிறகு நடந்தது எனக்கு சரியாக நினைவில் இல்லை. என் வாயில் மது ஊற்றப்பட்டது தெரிந்தது. என்னை ஏதோ செய்கிறார் என்று தெரிந்தது. மறுநாள் மதியம் கண் விழித்தபோது உடம்பு வலித்தது. என்னை பலாத்காரம் செய்ததோடு மட்டும் அல்லாமல் என் வீட்டில் வைத்தே என்னை கஷ்டப்படுத்தியிருக்கிறார். என்னால் படுக்கையில் இருந்து எழ முடியவில்லை என அதில் தெரிவித்து உள்ளார்.

இவர் தயாரித்து, எழுதிய டி.வி.யில் நம்பர் ஒன் நிகழ்ச்சியான தாரா சீரியலில் நடித்த நவ்னீத் நிஷான் என்பவரும் வின்டாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதனுடன், ஆலோக் நாத் மீது நடிகை சந்தியா மிருதுல் மற்றும் தீபிகா அமீன் உள்ளிட்டோரும் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து கடந்த வாரம் சமூக வலைதளத்தில் அதனை வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நடிகர் ஆலோக் நாத் வின்டா நந்தாவுக்கு எதிராக நேற்று முன்தினம் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.  வின்டா எழுத்துப்பூர்வ மன்னிப்பு கோர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளதுடன், ரூ.1 இழப்பீடாக தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஆலோக்கிற்கு எதிராக ஓசிவாரா காவல் நிலையத்தில் இயக்குநர் வின்டா தனது புகாரை இன்று அளித்துள்ளார்.

அதன்பின் வின்டா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், போலீசார் ஒத்துழைப்புடன் செயல்பட்டனர்.  ஒரு பெண் துணை ஆய்வாளர் நான் கூறியவற்றை பதிவு செய்து கொண்டார்.  எனது வாக்குமூலத்தினை அளித்தது அவ்வளவு சுலபம் அல்ல.  உங்களுக்கு ஏற்பட்ட வலியை நீங்கள் மீண்டும் நினைவுகூர்ந்தது போன்று இருந்தது என தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, வின்டா எழுத்துப்பூர்வ விண்ணப்பம் ஒன்றை அளித்துள்ளார்.  நாங்கள் விசாரணையை தொடங்கியுள்ளோம் என கூறியுள்ளார்.

Next Story