நடிகர்களின் ரசிகர் மன்றங்களில் குண்டர்கள் நடிகை பார்வதி ஆவேசம்


நடிகர்களின் ரசிகர் மன்றங்களில் குண்டர்கள் நடிகை பார்வதி ஆவேசம்
x
தினத்தந்தி 19 Oct 2018 10:15 PM GMT (Updated: 19 Oct 2018 7:18 PM GMT)

தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒருநாள், உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளவர் பார்வதி.

தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒருநாள், உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளவர் பார்வதி. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப்பை விமர்சித்து வருகிறார். மலையாள நடிகர் சங்கத்தில் திலீப்பை சேர்த்த மோகன்லாலையும் கண்டித்தார். இதனால் பார்வதியை சங்கத்தில் மற்ற மலையாள நடிகர்கள் எதிர்க்கிறார்கள். நடிகர்களின் ரசிகர்களும் பார்வதியை சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசுகிறார்கள். இதனால் வருத்தத்தில் இருக்கும் பார்வதி அளித்த பேட்டி வருமாறு:-

“நடிகைகள் பாதுகாப்புக்காக மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம். அதன்பிறகு எனக்கும் அந்த அமைப்பில் இருக்கும் மற்ற நடிகைகளுக்கும் புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குகிறார்கள். இந்தி பட உலகில் மீ டூவில் பாலியல் புகார் கூறிவரும் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் அளிக்கின்றனர். தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் புதிய படங்களில் அவர்களை ஒப்பந்தம் செய்கிறார்கள். ஆனால் கேரளாவில் அப்படி இல்லை. ஒதுக்குகிறார்கள். இங்கு கதாநாயகர்களை கடவுளாக பார்க்கின்றனர். நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குண்டர்கள் மன்றமாக மாறி இருக்கிறது.

அவர்கள் சமூக வலைத்தளங்களில் எனக்கும் மற்ற நடிகைகளுக்கும் கொலை மிரட்டல், பாலியல் மிரட்டல்கள் விடுக்கின்றனர். எங்கள் வீடுகள் தீவைத்து கொளுத்தப்படலாம் என்று அஞ்சுகிறோம். தினமும் பயத்திலேயே இருக்கிறோம். நிறைய வெற்றி படங்களில் நடித்துள்ள எனக்கு ஒரு வருடமாக படங்கள் இல்லை.”

இவ்வாறு பார்வதி கூறினார்.

Next Story