கார் விபத்தில் 3 பேர் காயம் நடிகர் ராணா தந்தை மீது வழக்கு


கார் விபத்தில் 3 பேர் காயம் நடிகர் ராணா தந்தை மீது வழக்கு
x
தினத்தந்தி 22 Oct 2018 10:45 PM GMT (Updated: 22 Oct 2018 5:34 PM GMT)

நடிகர் ராணாவின் தந்தை சுரேஷ்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராணா. தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவரது தந்தை சுரேஷ்பாபு தெலுங்கு பட உலகில் தயாரிப்பாளராக இருக்கிறார். இவர் பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் ராமாநாயுடுவின் மகன் ஆவார். தெலுங்கு நடிகர் வெங்கடேசின் சகோதரர். 

சுரேஷ்பாபு, தனது சொகுசு காரில் ஐதராபாத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கர்கானா பகுதியில் உள்ள இம்பீரியன் கார்டன் அருகே கார் வந்தபோது, இரு சக்கர வாகனம் மீது மோதியது. 

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சதீஷ் சந்திரா (வயது 35) நீலம் துர்கா தேவி (30) மற்றும் அவர்களின் குழந்தை சித்திஷ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். 

காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுரேஷ்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story