‘‘மீ டூவில் வெளியான பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது’’ –இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்


‘‘மீ டூவில் வெளியான பெயர்கள் அதிர்ச்சி அளிக்கிறது’’ –இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்
x
தினத்தந்தி 23 Oct 2018 11:00 PM GMT (Updated: 23 Oct 2018 6:41 PM GMT)

தமிழ் பட உலகில் மீ டூ இயக்கம் புயலை கிளப்பி வருகிறது. சின்மயி தொடங்கி நடிகைகள், பெண் டைரக்டர்கள், பாடகிகள் என்று தொடர்ந்து பாலியல் தொல்லைகளை வெளியிட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் சகோதரியும் இசையமைப்பாளருமான ரெஹானா கூறும்போது சின்மயி சர்ச்சைக்கு பிறகு மீ டு விவகாரம் உண்மையா என்று ஏ.ஆர்.ரகுமான் தன்னிடம் விசாரித்ததாக தெரிவித்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையில்தான் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை பாடி சின்மயி அறிமுகமானார். 

சின்மயி தவிர மேலும் சில பாடகிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக மீ டூவில் பதிவிட்டு இருப்பது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மீ டு இயக்கம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–

‘‘மீ டூ இயக்கம் சம்பந்தமான வி‌ஷயங்களை நான் கவனித்துக்கொண்டு இருக்கிறேன். இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பெயர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். சினிமா துறையை பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் உள்ள துறையாக மாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கிடைக்க வேண்டும். அனைவருக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கி தரவும், சிறந்த கலைஞர்கள் வெற்றி பெறும் சூழ்நிலையை உருவாக்கவும் நான் கடமைப்பட்டு உள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க சமூக வலைத்தளங்கள் சிறப்பான இடத்தை அளித்துள்ளது. அதே நேரம் இதை தவறாக பயன்படுத்தாத வகையில் கவனமாக இருக்க வேண்டும்.’’

இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.

Next Story