‘‘சினிமா தொழில் நிரந்தரம் இல்லை’’ – நடிகை டாப்சி


‘‘சினிமா தொழில் நிரந்தரம் இல்லை’’ – நடிகை டாப்சி
x
தினத்தந்தி 25 Oct 2018 10:00 PM GMT (Updated: 25 Oct 2018 5:02 PM GMT)

தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்த டாப்சி இப்போது இந்தியில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கில் தயாராகும் கேம் ஓவர் படத்திலும் நடிக்கிறார்.

நடிகை டாப்சி அளித்த பேட்டி வருமாறு:–

எதுவும் சுலபமாக கிடைத்தால் மதிப்பு தெரியாது. சினிமாவில் நான் இந்த நிலைக்கு உயர்ந்தற்கான பயணம் சுலபமாக நடக்கவில்லை. எல்லாமே கஷ்டப்படாமல் கிடைத்து விட்டால் நம்மை பெருமையாக நினைத்து விடுவோம். சினிமா துறையில் எதுவும் நிரந்தரம் கிடையாது. ரசிகர்கள் இன்று நமக்கு காட்டும் அன்பு நாளை வேறு ஒருவருக்கு மாறிவிடும். 

ஒரு நிலையில்லாமல் இருக்கிற துறை சினிமாதான். எனவே ஓய்வாக இருக்கவே கூடாது. எனது பழைய படங்களை நான் காதலித்து ரசித்து நடிக்கவில்லை. அப்படியே இருந்திருந்தால் என்றைக்கோ எனது சினிமா வாழ்க்கை முடிந்து இருக்கும். மனதில் பயம் வைத்துக்கொண்டு இன்னும் புதுசாக ஏதாவது செய்ய வேண்டும். வித்தியாசமான கதை கதாபாத்திரங்களில்  நடிக்க வேண்டும் என்று நினைத்ததால்தான் சினிமா துறையில் இவ்வளவு நாட்களாக நீடிக்கிறேன். 

ரசிகர்கள் நம்மீது காட்டும் அன்பு நிரந்தரம் இல்லை. சரியாக நடிக்காவிட்டால் அது மாறிவிடும் என்ற பயம் இருந்ததால்தான் பெரிய பொறுப்போடு நான் நடந்து கொண்டேன். அது என்னை உயரத்துக்கு கொண்டு போனது.’’

இவ்வாறு டாப்சி கூறினார். 

Next Story