பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர் - ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்


பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர் - ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்
x
தினத்தந்தி 28 Oct 2018 10:30 PM GMT (Updated: 28 Oct 2018 7:05 PM GMT)

பாலியல் தொல்லை கொடுப்பதாக, நடிகர் ஒருவருக்கு ஸ்ரீரெட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.

தெலுங்கு பட உலகில் பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைப்பதாக பரபரப்பு புகார் கூறி திரையுலகை அதிர வைத்தவர் ஸ்ரீரெட்டி. பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். இதில் தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் சிக்கினர்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் தனக்கு மிரட்டல் இருப்பதாக கூறி அங்கிருந்து வெளியேறி இப்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகிறது. லாரன்சும் தனது அடுத்த படத்தில் நடிக்க ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு அளித்துள்ளார்.

சில நாட்களாக அமைதியாக இருந்த ஸ்ரீரெட்டி இப்போது முன்னணி நடிகர் ஒருவர் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி அடுத்த அதிரடியை தொடங்கி இருக்கிறார். நடிகரின் பெயரை சொல்லாமல் முகநூலில் அவர் கூறியிருப்பதாவது:-

“நடிகர் சங்கத்தில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளர் சங்கத்திலும் இருக்கும் ஒருவர் கதாநாயகிகளுக்கும் துணை நடிகைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கிறார். ஆனால் வெளியில் புத்திசாலித்தனமாக பேசுகிறார். அவரைப்பற்றி எல்லோருக்கும் தெரியும். என்னிடமும் ஆதாரங்கள் உள்ளன.

பதவியை வைத்து பலரை மிரட்டுகிறார். அவரால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வழக்கறிஞர்கள் உதவியுடன் அந்தநடிகரின் அத்துமீறல்களை வெளியே கொண்டு வருவேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீரெட்டி யாரை சொல்கிறார் என்று விவாதம் நடக்கிறது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story