அர்ஜூன் மீது பாலியல் புகார் கூறிய சுருதி ஹரிகரன், புதிய படத்தில் இருந்து நீக்கம்


அர்ஜூன் மீது பாலியல் புகார் கூறிய சுருதி ஹரிகரன், புதிய படத்தில் இருந்து நீக்கம்
x
தினத்தந்தி 29 Oct 2018 10:45 PM GMT (Updated: 29 Oct 2018 9:59 PM GMT)

அர்ஜூன் மீது பாலியல் புகார் கூறிய சுருதி ஹரிகரன், புதிய படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.


நடிகைகள் பெண் இயக்குனர்கள் பாடகிகள் உள்ளிட்டோர் திரையுலகில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதை மீ டூவில் பதிவிட்டு வருகிறார்கள். முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இதில் சிக்கி உள்ளனர். தமிழ், கன்னட பட உலகில் பிரபல கதாநாயகனாக இருக்கும் அர்ஜூன் மீது கன்னட நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறினார். படப்பிடிப்பு ஒத்திகையில் அர்ஜூன் இறுக்கமாக கட்டி அணைத்தார் என்றும் ரிசார்ட்டுக்கு அழைத்தார் என்றும் அவர் தெரிவித்தார். இதனை அர்ஜூன் மறுத்ததுடன் சுருதி ஹரிகரன் மீது ரூ.5 கோடி மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

சுருதி ஹரிகரனும் அர்ஜூன் மீது போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த மனு அடிப்படையில் அர்ஜூன் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதனால் அவர் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சுருதி ஹரிகரனை ‘தாரி தப்சித்டான் தேவ்ரு’ என்ற கன்னட படத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தம் செய்து இருந்தனர். இந்த படத்தை பி.எஸ்.லிங்கா தேவ்ரு இயக்குவார் என்றும் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் அறிவித்து இருந்தனர். இப்போது அந்த படத்தில் இருந்து அவரை நீக்க முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து டைரக்டர் லிங்கதேவ்ரு கூறும்போது, “அர்ஜூன் மீது சுருதிஹரிகரன் வழக்கு தொடர்ந்துள்ளதால் அவர் அடிக்கடி நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டி இருக்கும். எனவே அவரை படத்தில் எங்களால் நடிக்க வைக்க முடியாது. வேறு கதாநாயகி தேடுகிறோம். மீ டூ விவகாரத்தை 4 சுவர்களுக்குள் முடிந்திருக்க வேண்டும். அது வீதிக்கு வந்து ரசிகர்கள் மோதும் நிலைக்கு மோசமாகி விட்டது” என்றார்.


Next Story