காங்கிரசில் சேர முடிவா? - நடிகர் பிரபு விளக்கம்


காங்கிரசில் சேர முடிவா? - நடிகர் பிரபு விளக்கம்
x
தினத்தந்தி 29 Oct 2018 11:15 PM GMT (Updated: 29 Oct 2018 10:17 PM GMT)

காங்கிரசில் சேருவது தொடர்பான கேள்விக்கு நடிகர் பிரபு விளக்கம் அளித்தார்.


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகனும் பிரபல நடிகருமான பிரபு, காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக தகவல்கள் பரவின. பிரபுவின் சகோதரரும் தயாரிப்பாளருமான ராம்குமார் சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசும்போது, பிரபுவை அரசியலில் இறக்கி விடுவது குறித்து யோசிக்கிறோம்” என்றார்.

காங்கிரசில் உள்ள சிவாஜி கணேசன் ரசிகர்கள் பிரபு காங்கிரசில் சேர வேண்டும் என்று விரும்புவதாகவும், மேலிட தலைவர்களும் பிரபுவை காங்கிரஸ் கட்சியில் சேர்க்க முயற்சிப்பதாகவும் தகவல் வெளியானது. ராகுல்காந்தி சென்னை வரும்போது சிவாஜி கணேசன் வீட்டுக்கு செல்கிறார் என்றும் அப்போது அவர் முன்னிலையில் பிரபு காங்கிரசில் இணைகிறார் என்றும் பேசப்பட்டது. தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள குஷ்பு, நக்மா ஆகியோர் காங்கிரசில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபு, உதயா ஆகியோர் நடித்துள்ள ‘உத்தரவு மகாராஜா’ படக்குழுவினர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பிரபுவிடம் காங்கிரசில் சேருவீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பிரபு கூறியதாவது:-

“பெருந்தலைவர் காமராஜர் இருந்தபோது அப்பா காங்கிரசில் இருந்து அந்த கட்சிக்காக உழைத்தார். அதன்பிறகு இந்திரா காந்தி காலத்திலும் காங்கிரசுக்காக உழைத்தார். 1960-முதல் 1990-வரை காங்கிரஸ் வளர்ச்சிக்காக பாடுபட்டார். எங்கள் அப்பா மறைந்ததும் சோனியா காந்தி எங்கள் வீட்டுக்கு வந்து இரங்கல் தெரிவித்தார்.

இப்போது சென்னை வரும் ராகுல்காந்தி முன்னிலையில் நான் காங்கிரசில் சேரப்போவதாக இணையதளங்களில் செய்திகள் வந்துள்ளன. ராகுல் காந்தி எங்கள் வீட்டுக்கு வந்தால் மகிழ்ச்சியோடு வரவேற்போம். இப்போது அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை. அப்படி இறங்குவதாக இருந்தால் ரசிகர்களையும் பொதுமக்களையும் கலந்து பேசிவிட்டு எனது முடிவை தெரிவிப்பேன்.”

இவ்வாறு பிரபு கூறினார்.


Next Story