கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் வேண்டாம் - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்


கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் வேண்டாம் - ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 Nov 2018 11:30 PM GMT (Updated: 2 Nov 2018 8:06 PM GMT)

தனது கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜய்யின் சர்கார் படம் சர்ச்சைகளை தாண்டி தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. ஏற்கனவே விஜய் புகைபிடிக்கும் புகைப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் டுவிட்டரில் இருந்து நீக்கினர். அதன்பிறகு திருட்டுக்கதை என்று கோர்ட்டில் வழக்கு தாக்கலாகி சமரச முயற்சியால் முடித்து வைக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் அதிகமான தியேட்டர்களில் திரையிடுகின்றனர். ஆந்திராவில் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். கேரளா, கர்நாடகாவிலும் கூடுதல் தியேட்டர்களில் ரிலீசாகிறது. வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் சர்கார் பட கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகிறார்கள்.

தியேட்டர்களில் வைக்க விஜய்யின் கட் அவுட்களை தயார் செய்துள்ளனர். கொடி தோரணங்கள், பேனர்களும் வைக்கிறார்கள். விஜய் கட் அவுட்களுக்கு குடம் குடமாக பால் ஊற்றி அபிஷேகம் செய்யவும் திட்டமிட்டு உள்ளனர். இது விஜய் கவனத்துக்கு வந்ததால் யாரும் பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார். அந்த பாலை ஏழை குழந்தைகளுக்கு வழங்குங்கள் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே காவலன், வேட்டைக்காரன் படங்கள் வெளியானபோது இதுபோல் வேண்டுகோள் விடுத்தார். அதன்பிறகு வந்த சுறா, வேலாயுதம், ஜில்லா, கத்தி, துப்பாக்கி, பைரவா உள்ளிட்ட படங்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதை தவிர்த்தனர். ஆனால் கடந்த மெர்சல் படத்துக்கு சில இடங்களில் பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சிகள் நடந்தன.

சர்கார் படத்துக்கு அவ்வாறு செய்ய வேண்டாம் என்று விஜய் கேட்டுக்கொண்டு இருக்கிறார். சென்னை நீலாங்கரைக்கு சென்ற நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜியை விஜய் ரசிகர்மன்ற நிர்வாகிகள் சந்தித்து “ரசிகர்கள் யாரும் பால் அபிஷேகம் செய்ய வேண்டாம். அதை விஜய் விரும்ப மாட்டார்” என்று அவர் பேசுவது போன்று வீடியோவை தயார் செய்து வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.


Next Story