மசூதிக்கு சென்ற போது செல்பி எடுத்த ரசிகர்கள்: நடிகர் மம்முட்டி கோபம்


மசூதிக்கு சென்ற போது செல்பி எடுத்த ரசிகர்கள்: நடிகர் மம்முட்டி கோபம்
x
தினத்தந்தி 4 Nov 2018 11:15 PM GMT (Updated: 4 Nov 2018 8:38 PM GMT)

நடிகர் நடிகைகள், ரசிகர்களின் செல்பி தொல்லையை தினமும் சந்திக்கிறார்கள், கடை திறப்பு விழாக்கள், விமான நிலையங்கள், கோவில்கள், படப்பிடிப்பு பகுதிகள் என்று எங்கு சென்றாலும் அவர்களுடன் செல்பி எடுக்க ரசிகர்கள் திரள்கிறார்கள்.

நடிகர் நடிகைகளுக்கு இதனால்  அசவுகரியங்கள் ஏற்படுகின்றன.

சமீபத்தில் மதுரையில் நடிகர் சிவகுமாருடன் இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றபோது அவரது செல்போனை சிவகுமார் தட்டி விட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அந்த சம்பவத்துக்கு சிவகுமார் வருத்தம் தெரிவித்ததுடன் அந்த இளைஞருக்கு புதிய செல்போனையும் வாங்கி கொடுத்தார்.

இப்போது மலையாள நடிகர் மம்முட்டியும் செல்பி ரசிகர்களால் கோபமுற்றார். கேரளாவில் உள்ள காசர்கோடு பகுதியில் ஒரு மசூதிக்கு தொழுகை செய்ய மம்முட்டி சென்றார். அவர் காரில் இருந்து இறங்கியதும் ரசிகர்கள் சூழ்ந்து செல்பி எடுக்க முண்டியடித்தனர். இது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

உதவியாளர்கள் மூலம் அவர்களை அப்புறப்படுத்தினார். செல்பி எடுத்த ரசிகர்களிடம், ‘‘மசூதி செல்பி எடுப்பதற்கான இடம் இல்லை. இது பிரார்த்தனை செய்வதற்கான இடம். எனவே செல்பி எடுக்காதீர்கள்’’ என்று அறிவுரை கூறினார். இதைத்தொடர்ந்து ரசிகர்கள் செல்பி எடுப்பதை நிறுத்தினார்கள். அதன்பிறகு மசூதிக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story