கடுமையான கண்காணிப்பையும் மீறி ‘சர்கார்’ படம் இணையதளத்தில் வெளியானது திரையுலகினர் அதிர்ச்சி


கடுமையான கண்காணிப்பையும் மீறி ‘சர்கார்’ படம் இணையதளத்தில் வெளியானது திரையுலகினர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 7 Nov 2018 11:15 PM GMT (Updated: 7 Nov 2018 5:58 PM GMT)

கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மீறி, இணையதளத்தில் ‘சர்கார்’ படம் வெளியானது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

விஜய் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் தீபாவளியன்று வெளியான திரைப்படம், ‘சர்கார்’.

‘சர்கார்’ படம் வெளியாகும் முன்பே கதை திருட்டு, அரசியல் படம் என ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. இதனாலேயே இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் ‘தீபாவளியன்று வெளியாகும் ‘சர்கார்’ படத்தை எச்.டி. பிரிண்டில் அன்றைய தினமே வெளியிடுவோம்’, என தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவு கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெளிப்படையான சவால் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்தது.

கண்காணிப்பு நடவடிக்கைகள்

இதையடுத்து ‘சர்கார்’ படத்தை இணையதளத்தில் வெளியிடுவதை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளிலும் தயாரிப்பாளர்கள் சங்கம் களமிறங் கியது. ‘தியேட்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள், செல்போன் மற்றும் வீடியோ கேமராவில் எவரேனும் திருட்டுத்தனமாக படம் பிடிக்கிறார்களா? என்பதை கண்டறிய ஒவ்வொரு தியேட்டர்களிலும் ஆட்களை நியமியுங்கள், தவறான நபர்களை பிடித்து போலீசில் ஒப்படையுங்கள்’, என்று திரையரங்கு உரிமையாளர்களுக்கு வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக தொடரப்பட்ட ஒரு வழக்கிலும் ‘சர்கார்’ படத்தை இணையதளத்தில் வெளியிட சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.

இணையதளத்தில் வெளியானது

இந்தநிலையில் ‘சர்கார்’ படம் நேற்றுமுன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்திலும் அதிகமான திரையரங்குகளில் ‘சர்கார்’ திரையிடப்பட்டது. தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அதேவேளை திரையரங்குகளில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஆனால் ‘காப்பானை விட கள்ளனே பெரியவன்’ என்பதுதான் நிரூபணம் ஆனது. ஏற்கனவே சவால் விட்டிருந்தபடி சர்கார் திரைப்படம் நேற்றுமுன்தினம் மாலை இணையதளத்தில் வெளியானது. இந்த தகவல் சமூக வலைதளத்தில் வேகவேகமாக பகிரப்பட்டது. இதனால் ஏராளமானோர் ‘சர்கார்’ திரைப்படத்தை திருட்டுத்தனமாக ‘டவுன்லோடு’ செய்துகொண்டனர்.

திரையுலகினர் அதிர்ச்சி

‘சர்கார்’ திரைப்படம் இணையதளத்தில் வெளியானதால், படக்குழுவினர் உள்பட திரையுலகினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தீவிரமான கண்காணிப்பையும் மீறி ‘சர்கார்’ படத்தை திருட்டுத்தனமாக எப்படி வெளியிடப்பட்டது? என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். இதுதொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகளை கையாள தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு எடுத்து வருகிறது.

அதேநேரத்தில் சவால் விட்டபடி, ‘சர்கார்’ படம் இணையதளத்தில் வெளியானது குறித்து சமூக வலைதளங்களில் ‘மீம்ஸ்’களும் வெளியாகி வேகமாக பரவிவருகிறது.

Next Story