இந்தி பட தயாரிப்பால் தளர்ந்து போன பி.எஸ்.வீரப்பா


இந்தி பட தயாரிப்பால் தளர்ந்து போன பி.எஸ்.வீரப்பா
x
தினத்தந்தி 9 Nov 2018 12:19 PM GMT (Updated: 9 Nov 2018 12:19 PM GMT)

நாங்கள் சினிமாவைப் பார்த்து ரசிக்கத் தொடங்கியிருந்த காலத்தில், எங்களை பயமுறுத்துகிற வகையிலும், பெண்களிடம் கெட்டபெயரும், வசைபாட்டும் வாங்குகிற வகையிலும், வெள்ளித்திரையை ஆக்கிரமித்துப் போனவர்தான் பி.எஸ்.வீரப்பா.

அவருடைய பயங்கரமான சிரிப்பும், வசனம் பேசுகின்ற பாணியும் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒன்று. அது அவருக்கு கதாநாயகயர்களுக்கு இணையான ஆண் ரசிகர்களையும் பெற்றுத்தந்தது. வீரப்பா வருகின்ற முதல் காட்சியில் ஆண் ரசிகர்களிடம் இருந்து கைதட்டல்களும், விசில் சத்தங்களும் எழும் அதே நேரத்தில், பெண்களிடம் இருந்து வசைப்பாட்டுகள் வருவது வாடிக்கையாகிப் போனது.

சண்டைக் காட்சிகள் நிறைந்த எம்.ஜி.ஆர். திரைப்படங்களில், எம்.ஜி.ஆர். வந்ததும் தான் படம் சூடுபிடிக்கும். அதே வேளையில் எம்.ஜி.ஆர். படத்தில் பி.எஸ்.வீரப்பா இருந்தால், அவர் வந்ததுமே படம் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும் என்பது தான் பி.எஸ்.வீரப்பாவுக்கு கிடைத்த வெற்றி. கோயம்புத்தூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த பி.எஸ்.வீரப்பா, சினிமாத் துறையில் அறிமுகமானது 1939-ம் ஆண்டு வெளியான ‘மணிமேகலை’ திரைப்படத்தில் தான். ஆனால் அவருக்கு பெயர் பெற்றுத் தந்தது, 1948-ம் ஆண்டு தியாகராஜபாகவதர் நடிப்பில் வெளியான ‘ராஜமுக்தி’ திரைப்படம்.

தொடர்ந்து பி.எஸ்.வீரப்பா நடித்த படங்களில் தனக்கென நிலையான ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். அவரது வசனங்களில், ‘மணந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி’, ‘இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்’ போன்ற வசனங்கள் மிகவும் பிரபலம். இந்த வசனங்களை இன்றும் கூட சிலர் உச்சரிப்பதை கேட்க முடியும். தவிர ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் பத்மினியும், வைஜெயந்திமாலாவும் ஆடும் போட்டி நடனத்தின் நடுவே ‘சபாஷ்! சரியான போட்டி’ என்று சொல்லும் பி.எஸ்.வீரப்பாவின் வசனமும் குறிப்பிடத்தக்க ஒன்று.

சிறுவர்களாக இருந்த எங்களை வீட்டில் உள்ளவர்கள் மிரட்டுவதற்குக் கூட பி.எஸ்.வீரப்பா பயன்பட்டார். வீட்டில் சொல் பேச்சு கேட்கவில்லை என்றால், ‘வீரப்பா வரப்போகிறார், அவரிடம் பிடித்துக் கொடுத்துவிடுவோம்’ என்று பெற்றோர் மிரட்டுவர். அதற்கு பயந்து அவர்கள் சொல்கிறபடி எல்லாம் நடந்துகொள்வோம்.

எங்களுடைய மண்டைக்குள் அரித்துக்கொண்டிருந்த சில கேள்விகளை, பெரியவர்களிடம் கேட்டும், மனம் திருப்தி அடையவில்லை. 15 வயது வரை அதற்கான சரியான விடைகள் கிடைக்கவில்லை.

‘எம்.ஜி.ஆரும், வீரப்பாவும் உண்மையிலேயே சண்டை போட்டால், யார் ஜெயிப்பார்கள்? உண்மையான பலசாலி யார்?’ எங்களின் சிறுவயதில் எழுந்த இந்த கேள்விகளுக்கு, பெரியவர்கள் அவரவரின் விருப்பத்திற்கும், வெறுப்பிற்கும் ஏற்றபடி பதில்களைக் கூறி, எங்களை குழப்பத்தில் ஆழ்த்துவார்கள்.

ஒரு சிலர் எம்.ஜி.ஆர். மீதுள்ள வெறுப்பில், ‘டேய் பசங்களா! வீரப்பாதாண்டா உண்மையான பலசாலி. எம்.ஜி.ஆர். அவர்கிட்ட ஒண்ணும் வாலாட்ட முடியாது. கையில் சிக்கினால் ஒரே அமுக்குதான், எம்.ஜி.ஆருக்கு வாயில் நுரை தள்ளிவிடும்’ என்பார்கள்.

ஒரு சிலர் ‘வீரப்பா பலசாலிதாண்டா. ஆனால் எம்.ஜி.ஆர். 16 விதமான சண்டைகள் தெரிந்தவர். வீரப்பாவிற்கு கத்திச்சண்டை மட்டும் தான் தெரியும். எம்.ஜி.ஆர். கிட்ட வீரப்பா ஒண்ணும் செய்ய முடியாது’ என்றபடி எம்.ஜி.ஆருக்கு தெரிந்ததாக சொன்ன 16 விதமான சண்டைகளை அடுக்கி எங்களை கிறங்கடிப்பார்கள்.

இது போன்ற கேள்விகளும், சந்தேகங்களும் என்னுடைய 25 வயது வரை நீண்டது. ‘குத்துச்சண்டை வீரர் முகமது அலியும், புரூஸ்லியும் மோதினால் யார் ஜெயிப்பார்கள்?’ என்று, வயதுக்கு ஏற்றபடி அது வளர்ந்து கொண்டே சென்றது. இதற்கு ‘போலாரிட்டு’ என்று பெயர். அதாவது இருவேறு கருத்துகள், இருவேறு நாடுகள், இருவேறு மதங்கள், இருவேறு நபர்கள் என்று, உலகில் இரண்டு இரண்டாக எல்லாவற்றிலும் ஒப்பீடு செய்து மனிதர்கள் சண்டை போட்டுக்கொள்வதும், கருத்து மோதல்களில் ஈடுபடுவதும், மனிதகுலம் அழியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இன்றைக்கு அவைகளை நினைத்துப் பார்த்தால் எவ்வளவு அறியாமையில் இருந்திருக்கிறோம் என்று வெட்கத்தில் தலைகுனிந்து எனக்குள் நானே சிரித்துக் கொள்வேன்.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1956-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்.’ நான் அந்தப் படத்தை 1960-ம் ஆண்டு தான் பார்த்தேன். அந்தப் படத்தில் பி.எஸ்.வீரப்பாவின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதை, நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்தப் படம் வந்த நேரத்தில் சிறுவர்களாகிய எங்களுக்கு, அவர் ஒரு சிம்மசொப்பனமாக இருந்தார். ‘சக்கரவர்த்தி திருமகள்’ படம் பார்த்த இரவும், ‘மகாதேவி’, ‘கைதி கண்ணாயிரம்’ போன்ற படங்களைப் பார்த்த இரவுகளும் எங்களைப் போன்ற ரசிகர்களுக்கு, தூங்காத இரவுகளாக இருந்தன. அந்த அளவிற்கு அவர் அன்றைக்கு எங்களுக்கு உலகத்திலேயே மிகப்பெரிய வில்லனாகக் காட்சியளித்தார்.

பின்னாட்களில் நான் அவரைச் சந்தித்தபோது இவற்றையெல்லாம் அவரிடம் சொன்னேன். அதற்கு அவர், ‘என்னுடைய நடிப்பையும், என்னையும் பார்த்து ஏன் பயப்படுகின்றீர்கள்? நான் அவைகளை சாதாரணமாகத்தானே செய்தேன்’ என்றார்.

திரைப்படங்களில் நாம் பார்த்து பயப்படுகின்ற வீரப்பாவை, நேரில் பார்த்தால் முற்றிலும் வேறுவிதமாகக் காட்சியளிப்பார். அந்த வீரப்பாவுக்கு சூது, வாது, தந்திரம், அடுத்தவர்களைக் கெடுத்து வாழுவது, அடுத்தவர்களை கவிழ்த்திவிடுவது போன்ற எந்தவித செயல்களும், குணமும் கிடையாது. ‘நான்’ என்னும் அகந்தை இல்லாமல் வெளிப்படையாகப் பேசும் மனம் படைத்தவர் அவர். அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம், திரைக்கும், நிஜத்திற்கும் இடையே இருக்கும் இடைவெளியை எண்ணி நாம் வியந்து போவதுண்டு.

1953-ம் ஆண்டு ஜூப்பிட்டருடன், மேகலா பிக்சர்ஸ் சேர்ந்து ‘நாம்’ என்ற படத்தை எடுத்தார்கள். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் ஜோடியாக நடித்தனர். அவர்களோடு பி.எஸ்.வீரப்பாவும் நடித்திருந்தார். படத்திற்கான வசனத்தை எழுதியவர் கலைஞர் கருணாநிதி. ஏ.காசிலிங்கம் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படத்தை நான்கு பேர் இணைந்து தயாரித்திருந்தனர். அதில் ஒருவர் பி.எஸ்.வீரப்பா. அந்தப் பழக்கத்தின் காரணமாக 1958-ம் ஆண்டு ‘பிள்ளைக்கனியமுது’ என்ற படத்தை தனியாக தயாரித்தார். அதன்பிறகு பல படங்களை தயாரித்தார். அந்தப் படங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்களும் நடித்தார்கள்.

1962-ம் ஆண்டு தமிழில் ‘ஆலயமணி’ என்ற படத்தை எடுத்தார். சிவாஜி கணேசன், சரோஜாதேவி இருவரும் ஜோடியாக நடித்தனர். கே.சங்கர் இயக்கியிருந்தார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படம் தெலுங்கிலும், இந்தியிலும் கூட தயாரிக்கப்பட்டது. இந்தியில் பி.எஸ்.வீரப்பாவே தயாரித்தார். இந்தியில் பீம்சிங் இயக்கினார். இந்தியில் ‘ஆத்மி’ என்ற பெயரில் அந்தப் படம் உருவானது. அதன்பிறகு பி.எஸ்.வீரப்பா எல்லா நிலைகளிலும் வீழ்ச்சியைச் சந்தித்தார். இதை அவரே என்னிடம் சொன்னார்.

‘ஆத்மி’ படத்தில் இந்தியின் புகழ்பெற்ற நடிகரான திலீப்குமார் கதாநாயகனாக நடித்தார். படப்பிடிப்பின் ஒரு பகுதியாக கொடைக்கானலில் 45 நாட்கள் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த நேரத்தில் 40 நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தால், சரியாக படப்பிடிப்பை நடத்த முடியவில்லை. ஷூட்டிங் இல்லாத அந்த நேரத்தில் எல்லாம் திலீப்குமாருக்கு சீட்டு விளையாடுவது தான் பொழுதுபோக்கு.

மேலும் அந்த சமயம் காஷ்மீரைச் சேர்ந்த ஷேக் அப்துல்லாவை, கொடைக்கானலில் ராணுவ பாதுகாப்பில் வைத்திருந்தார்கள். ஷேக் அப்துல்லாவும், திலீப்குமாரும் நெருங்கிய நண்பர்கள். ஷேக் அப்துல்லா எந்த ஓட்டலுக்கு தேநீர் அருந்தவும், சாப்பிடவும் வருவாரோ, அதே ஓட்டலுக்குத் தான் திலீப்குமாரும் செல்வார்.

முதல் நாளே பி.எஸ்.வீரப்பா அண்ணனுக்கு தலைவலி ஆரம்பமாகிவிட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளில் பெரும்பாலானோர், வீரப்பா அண்ணனின் ரசிகர்கள். எனவே தனிப்பட்ட முறையில் அவரிடம் வந்து, ‘சார்! தயவு செய்து திலீப்குமாரை இந்த ஓட்டலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அல்லது அவரிடமே சொல்லிவிடுங்கள். அப்படி முடியவில்லை என்றால், வேறு இடங்களுக்குச் சென்று ஷூட்டிங்கை நடத்துங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

காவல்துறையினர் சொன்ன விஷயங்களைக் கேட்டவுடன், வீரப்பா அண்ணனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. படத்தில் தான் பயங்கரமாக சிரிக்க முடியும். நிஜ வாழ்க்கையில் அப்படி முடியுமா? இந்த விஷயத்தை எப்படி திலீப்குமாரிடம் சொல்லுவது என்று குழம்பிப் போன அவர், காவல் துறையினரிடம் ஷேக் அப்துல்லா எந்த நேரத்தில் ஓட்டலுக்கு வருவார் என்பதை அறிந்து கொண்டு, அந்த நேரத்தில் திலீப்குமார் ஓட்டலுக்கு செல்லாதபடி பார்த்துக் கொண்டார்.

கொடைக்கானலில் பெய்த தொடர் மழையால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு, திலீப்குமாரின் கால்ஷீட் அனைத்தும் வீணானது. பிறகு எப்படியோ திலீப்குமாரிடம் பேசி, தேதிகள் வாங்கி ஒருவழியாக படத்தை முடித்து வெளியிட்டார் பி.எஸ்.வீரப்பா.

‘ஆலயமணி’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், மரணப்பாறை என்ற இடத்தில் இருந்து சக்கர நாற்காலியில் கடலுக்குள் விழுவது போல் ஒரு காட்சி வரும். அந்தக் காட்சியில் ஒரு பொம்மையை வைத்து கடலுக்குள் விழுவது போல் எடுத்து, உண்மையிலேயே சிவாஜிகணேசன் விழுவது போல், அவ்வளவு தத்ரூபமாக எடுத்திருந்தார் அந்தப்படத்தின் இயக்குனர் கே.சங்கர்.

ஆனால் இந்தியில் அந்தக் காட்சியை இயக்குனர் பீம்சிங் எடுக்கும்பொழுது, ‘டம்மி’ என்று சொல்லக்கூடிய பொம்மையை வைத்து சக்கர நாற்காலியில் தள்ளிவிட்டு எடுப்பதைவிட, உண்மையாகவே ஒரு ஆளை வைத்துத் தள்ளிவிட்டு எடுத்தால் மிகவும் நன்றாக இருக்குமே என்றாராம் திலீப்குமார். அந்த யோசனையை கேட்ட இயக்குனர் பீம்சிங், என்ன செய்வதென்று தெரியாமல் விழித்திருக்கிறார். பி.எஸ்.வீரப்பாவும் இந்த யோசனையைக் கேட்டவுடன் அப்படியே உறைந்துபோய் நின்றாராம்.

பின்னர் வீரப்பா, திலீப்குமாரிடம் உண்மையான நிலைமையையும், எதார்த்தமான உண்மையையும் கஷ்டங்களையும் விளக்கியிருக்கிறார். ‘அந்த அளவிற்கு மிக உயரமான இடத்தில் இருந்து எப்படிப்பட்ட திறமையான ஸ்டண்ட் நடிகர் விழுந்தாலும், அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது உறுதி; எனவே மிகவும் தத்ரூபமாக, நீங்களே விழுவதுபோல், உங்களாலேயே கண்டுபிடிக்க முடியாதபடி எடுக்கின்றோம்’ என்று உறுதியளித்திருக்கிறார். அப்படி விளக்கிச் சொன்ன பிறகுதான் திலீப்குமார், ஒரு வழியாக சமாதானம் ஆகியிருக்கிறார். பின்னர் பொம்மையை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிவிட்டு, திலீப்குமாரே கண்டுபிடிக்க முடியாதபடி எடுத்து அவரை திருப்திபடுத்தி இருக்கிறார்கள்.

நீண்ட தயாரிப்பில் இருந்த பிறகு ஒரு வழியாக 1968-ம் ஆண்டு ‘ஆத்மி’ திரைப்படம் வெளியானது. படம் மூன்று பிரதமர்களை கடந்து வெளிவந்தது. ஆம்.. 1964-ம் ஆண்டு மே மாதம் 27-ந் தேதி பிரதமர் ஜவஹர்லால் நேரு காலமானார். அவர் காலமாவதற்கு முன்பாகவே தொடங்கப்பட்டது ‘ஆத்மி’ திரைப்படம். அதன்பிறகு லால்பகதூர் சாஸ்திரி, பிரதமர் ஆன பிறகும், அதன் படப்பிடிப்பு நடைபெற்றது. அவருக்குப்பின் இந்திராகாந்தி பிரதமரான பின்னர்தான் அந்தப் படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் வெளியாகும் சமயம், அதற்கு முன்பு பி.எஸ்.வீரப்பா கையில் வைத்திருந்த பணமும், கார்களும் அவரை விட்டு போயி ருந்தது.

படம் வெளியானதும் பி.எஸ்.வீரப்பா, பாம்பே சென்றிருந்தார். அங்கு அவரது படம் வெளியாகி இருந்த தியேட்டருக்குச் செல்லக் கூட சொந்த கார் இல்லாமல், வாடகைக் காரில் போனதுதான் மிகப்பெரிய கொடுமை.

‘ஆத்மி’ படத்தைப் பற்றி சொல்வதற்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பி.எஸ்.வீரப்பாவை புகழ்ந்து பேசியிருக்கிறார் திலீப்குமார். ‘இதுவரை நான் சந்தித்த தயாரிப்பாளர்களில், இவரைப்போல் ஒருவரை கண்டதில்லை’ என்று உயர்த்திப் பேசியிருக்கிறார்.

ஆனால் ‘ஆத்மி’ திரைப்படத்தால் ஏற்பட்ட பொருளாதார நஷ்டமும், அது தந்த மனவேதனைகளும் மனதில் இருந்ததால், நடிகர் திலீப்குமாரின் பாராட்டுகள் அனைத்தும், பி.எஸ்.வீரப்பாவின் மனதைத் தேற்றும் வலுவில்லாத சொற்களாகவே போனது.

-தொடரும்.

ஷூட்டிங் பார்த்த பழ.கருப்பையா

பழ.கருப்பையாவும், இயக்குனர் காரைக்குடி நாராயணனும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்; நண்பர்கள். 1971-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘இருதுருவம்.’ பி.எஸ்.வீரப்பா தயாரித்த கடைசிப் படம் இது தான். ‘இருதுருவம்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில், காரைக்குடி நாராயணனைப் பார்க்க பழ.கருப்பையா வந்திருக்கிறார். அவரை ‘ஷூட்டிங் பார்க்க வருகிறாயா?’ என்று, நாராயணன் கேட்டிருக்கிறார்.

அதற்கு பழ.கருப்பையா, ‘நான் இதுவரை ஷூட்டிங்கே பார்த்ததில்லை. அத்துடன் சினிமாவிற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. நான் எதற்கு வர வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்.

‘சிவாஜி, பத்மினி எல்லாம் இன்றைய ஷூட்டிங்கில் இருக்கிறார்கள். நீ கட்டாயம் வர வேண்டும்’ என்று சொல்லி அவரை அழைத்துச் சென்றிருக்கிறார் நாராயணன்.

வலுக்கட்டாயமாக அழைத்ததன் பேரில் ஷூட்டிங் பார்க்க சென்ற பழ.கருப்பையா, அதன்பிறகு 20 படங்களைத் தயாரித்தார்.

தயாரிப்பாளர் தாணுவின் உதவி

இன்றைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட பெரிய பெரிய நட்சத்திரங்களை வைத்து படங்களை தயாரித்துக் கொண்டிருப்பவர் கலைப்புலி தாணு. அவர் படத் தயாரிப்பாளர்கள் என்றைக்குமே கஷ்டப்படக்கூடாது என்கிற கொள்கை கொண்டவர். அதனால்தான், பி.எஸ்.வீரப்பாவின் ஒரே மகனான ஹரிஹரன், பொருளாதாரத்தில் மிகவும் கஷ்டப்படுவதைக் கேள்விப்பட்டு, ரூ.1 லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார். அவர் செய்த உதவி பற்றிய செய்தி, பத்திரிகைகளில் வராமல் ரகசியமாகக் கொடுத்தது அவரது பெருந்தன்மை.

Next Story