அரசியல் படத்தில், நயன்தாரா


அரசியல் படத்தில், நயன்தாரா
x
தினத்தந்தி 10 Nov 2018 11:00 PM GMT (Updated: 10 Nov 2018 5:37 PM GMT)

அறம்–2 படத்தில், நயன்தாரா அரசியலில் ஈடுபடுவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

கதாநாயகர்களுடன் டூயட் மற்றும் காதல் காட்சிகளுக்கு வந்து போய்க்கொண்டிருக்கும் சராசரி கதாநாயகியாகத்தான் நயன்தாரா தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். நிஜ வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட காதலும், அதன் தோல்விகளும் அவருக்கு சரிவை ஏற்படுத்தவில்லை. நட்சத்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தன.

அடுத்து அவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திகில் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றன. அதைத்தொடர்ந்து அவருடைய சம்பளம் சில கோடிகளாக உயர்ந்தன. இப்போது அவருடைய சம்பளம் ரூ.4 கோடி!

அவருக்கு மிகப்பெரிய திருப்பமாக அமைந்த படம், ‘அறம்.’ இந்த படத்தை கோபி நயினார் இயக்கினார். படம் வெற்றி பெற்றதுடன், திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் வசூல் சாதனைகளை நிகழ்த்தின. அந்த படத்தில் நயன்தாரா, மாவட்ட கலெக்டராக நடித்து இருந்தார். அந்த வேடம் அவருக்கு பொருந்தியும் இருந்தது.

இதைத்தொடர்ந்து, அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ‘அறம்–2’ என்ற பெயரில், கோபி நயினார் இயக்க முடிவு செய்து இருக்கிறார். இரண்டாம் பாக படத்தில், நயன்தாரா அரசியலில் ஈடுபடுகிறார். மக்கள் இயக்கத்தை தொடங்கி போராடுவது போலவும், அவர் ஆட்சிக்கு வருவது போன்றும் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. 

‘‘இந்த படம் நயன்தாராவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது உறுதி’’ என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.

Next Story