“பழிவாங்க ‘மீ டூ’வை பயன்படுத்துகின்றனர்” - நடிகர் விஷால்
பழிவாங்க மீ டூ வை சிலர் பயன்படுத்துகின்றனர் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகளும் பெண் இயக்குனர்களும் மீ டூவில் பாலியல் புகார் கூறி வருகிறார்கள். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
“பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அதிகம் உள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடிகைகள் பணிசெய்யும் இடத்தில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வாய்ப்புக்காக பாலியல் தொந்தரவுகளுக்கு பலியாக கூடாது. ஆசைக்கு இணங்கா விட்டால் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்ற பயம் அகல வேண்டும்.
இந்தியாவில் உள்ள அனைத்து சினிமா துறையினரும் இணைந்து படப்பிடிப்பு அரங்குக்கு உள்ளேயும் வெளியேயும் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும். சமீபத்தில் திரைக்கு வந்த சண்டக்கோழி-2 படத்தில் கீர்த்தி சுரேசும், வரலட்சுமி சரத்குமாரும் நடித்தனர். அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளித்தோம்.
மீ டூ இயக்கம் பாலியலில் வன்மங்களில் ஈடுபடும் மிருகங்களை வெளிப்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது. ஆனால் எங்கோ ஒரு இடத்தில் சுயலாபத்துக்காகவும் அது பயன்படுத்தப்படுகிறது. ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க மறுத்ததற்காகவும் ஒரு படம் குறித்து வாக்குறுதி அளித்து விட்டு நிறைவேற்ற முடியாமல் போனதற்காகவும் இன்னும் சில காரணங்களுக்காகவும் பழிவாங்கும் நடவடிக்கையாக மீ டூ பயன்படுத்தப்படுகிறது.
காலையில் கண் விழிக்கும்போது எனது பெயரை கேட்க வேண்டி வருமோ? என்ற பயம் ஏற்படுகிறது. இந்த அவநம்பிக்கை, பயம் நீங்க வேண்டும். தனிப்பட்ட காரணங்களுக்காக நடிகர்கள் பெயர்களை களங்கப்படுத்துவதை தடுக்க வேண்டும். கட்டாயப்படுத்துவதற்கும் விரும்பி உறவு வைத்துக்கொள்வதற்கும் வேறுபாடுகள் உள்ளன.
திரைத்துறையில் 2 பெண்களுடன் நான் ‘டேட்டிங்’ செய்திருக்கிறேன். அதற்காக அவர்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக அர்த்தம் ஆகாது.”
இவ்வாறு விஷால் கூறினார்.
Related Tags :
Next Story