‘ஹலோ எப்.எம். ஆர்.ஜே.வாக நடித்ததில் பெருமிதம் கொள்கிறேன்’ நடிகை ஜோதிகா சொல்கிறார்


‘ஹலோ எப்.எம். ஆர்.ஜே.வாக நடித்ததில் பெருமிதம் கொள்கிறேன்’ நடிகை ஜோதிகா சொல்கிறார்
x
தினத்தந்தி 12 Nov 2018 11:13 PM GMT (Updated: 12 Nov 2018 11:13 PM GMT)

ஹலோ எப்.எம். ஆர்.ஜே.வாக நடித்ததில் பெருமிதம் கொள்வதாக நடிகை ஜோதிகா தெரிவித்தார்.

சென்னை,

ஹலோ எப்.எம்.106.4-ல் இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள ‘தாறுமாறு தர்பார்’ நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகா பங்குபெறும் சிறப்பு கலந்துரையாடல் ஒலிபரப்பாகிறது.

‘காற்றின் மொழி’ திரைப்படத்தில் ஹலோ எப்.எம். நிகழ்ச்சி தொகுப்பாளராக(ஆர்.ஜே.) நடித்ததில் பெருமிதம் கொள்வதாக கூறிய அவர், ‘தமிழ் தெரியாத தான், நிகழ்ச்சித் தொகுப்பாளர் கதாபாத்திரத்திற்காக, பக்கம் பக்கமாக தமிழ் வசனங்கள் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணி என்பது எத்தனை சிரமமான ஒன்று என்பதை தான் தெரிந்துகொண்டதாக குறிப்பிட்ட ஜோதிகா, ஹலோ எப்.எம். தொகுப்பாளர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

ஜோதிகா நடித்தால் மட்டுமே, காற்றின் மொழி படத்திற்கான உரிமையை வாங்க முடிவு செய்திருப்பதாக, படத்தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியது முதல், காற்றின் மொழி படம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே, தனக்கான வசனங்களை மனப்பாடம் செய்யத் தொடங்கியது வரை, அப்படம் தொடர்பான தகவல்களையும் சுவைபட கூறி உள்ளார்.

திருமண பந்தம் நீடிக்க, கணவன், மனைவி இருவரும் இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் காற்றின் மொழி படத்தில் பேசி இருப்பதாக உரையாடலில் சுட்டிக்காட்டியுள்ள ஜோதிகா, படத்தில் சொந்தக் குரலில் பேசி இருப்பது மட்டுமல்லாமல், பாடல் பாடியதுடன், மிமிக்கிரி செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னணிக் கதாநாயகர்களின் தற்போதைய படங்களில், கதாநாயகிகளுக்கு போதுமான முக்கியத்துவம் இல்லாததால், கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த புதிய இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிக்க விரும்புவதுடன், அதே போன்ற தரமான படங்களையே தங்களது தயாரிப்பு நிறுவனமான 2டி-யில் உருவாக்க விரும்புவதாகவும் அவர் நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் தெரிவித்தார்.

ஹலோ எப்.எம். நிகழ்ச்சித் தொகுப்பாளராக யாரை பேட்டி எடுக்க விரும்புகிறீர்கள்? என கேள்வி எழுப்பியபோது, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பேட்டி எடுக்க விரும்புவதாகவும், ஆனால் அது தற்போது சாத்தியமில்லை என்றும் ஜோதிகா பதிலளித்தார்.

காற்றின் மொழி திரைப்படத்தின் இயக்குனர் ராதாமோகன், கதாநாயகனாக நடித்துள்ள விதார்த், இசையமைப்பாளர் ஏ.ஹெச்.காஷிப் ஆகியோர் குறித்தும், தனது கணவர் நடிகர் சூர்யா மற்றும் குழந்தைகள், கணவர் குடும்பத்தினர் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

மேலும், நடிகை சிம்ரனுடனான நட்பு மற்றும் எதிர்கால திரைப்படங்கள் குறித்தும் ஜோதிகா தொகுப்பாளர் சுரேஷுடன் மனம் திறந்து உரையாடியுள்ளார். இது ஜோதிகாவின் முதல், வானொலிப் பேட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story