படத்துக்கு தடையா? : நடிகர் சிம்பு விளக்கம்


படத்துக்கு தடையா? : நடிகர்  சிம்பு  விளக்கம்
x
தினத்தந்தி 14 Nov 2018 11:45 PM GMT (Updated: 14 Nov 2018 7:11 PM GMT)

சிம்பு நடிப்பில் வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் தனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார்.

சிம்பு  நஷ்ட ஈடு கொடுக்காமல் புதிய படங்களில் நடிக்க கூடாது என்றும் வற்புறுத்தினார். இப்போது சுந்தர்.சி இயக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இதுகுறித்து மைக்கேல் ராயப்பன் கூறும்போது, ‘‘சிம்புவை வைத்து படம் எடுக்க கூடாது என்ற தயாரிப்பாளர் சங்க முடிவை சுந்தர்.சி மீறி இருப்பது கண்டிக்கத்தக்கது. பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிடுகிறார்கள். அந்த படத்துக்கு தயாரிப்பாளர் சங்கம் தடைவிதிக்க வேண்டும்’’ என்றார்.

விஷாலும், மைக்கேல் ராயப்பனும் சிம்பு படத்தை வெளிவர விடாமல் தடுப்பதாக சிம்பு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து பேசி வீடியோ வெளியிட்டு உள்ளனர். அது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த நிலையில் சிம்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘‘எனது ரசிகர்கள் தற்போது நடக்கும் நிகழ்வுகளை பார்த்து வருந்த வேண்டாம். தனிப்பட்ட யாரும் நம்மை ஓரம் கட்ட முடியாது. எந்த முடிவானாலும் குழு உறுப்பினர்களும் கவுன்சிலும் கூடித்தான் எடுக்க முடியும். தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நல்ல நோக்கத்தோடு வேலை செய்கிறார்கள். எனவே தனிப்பட்ட யாரையும் குறை சொல்ல வேண்டாம். அன்பாக இருப்போம். நீங்கள் இல்லாமல் நான் இல்லை. நமது வேலையை செய்வோம். பலன் தானாக வரும். படம் பொங்கலுக்கு வெளிவரும்.’’

இவ்வாறு அறிக்கையில் சிம்பு குறிப்பிட்டு உள்ளார்.

Next Story