மீண்டும் படங்களில் நடிக்கும் சிம்ரனை பாராட்டிய திரிஷா


மீண்டும் படங்களில் நடிக்கும் சிம்ரனை பாராட்டிய திரிஷா
x
தினத்தந்தி 15 Nov 2018 11:15 PM GMT (Updated: 15 Nov 2018 8:12 PM GMT)

தமிழில் 1990–களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் சிம்ரன். நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், பம்மல் கே.சம்பந்தம், கன்னத்தில் முத்தமிட்டால், ரமணா உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

2003–ல் தீபக் என்பவரை திருமணம் செய்து சினிமாவை விட்டு ஒதுங்கினார். இவர்களுக்கு அதீப், அதித் என்று 2 மகன்கள் உள்ளனர்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீப காலமாக சிம்ரன் மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார். சில படங்களில் கவுரவ தோற்றங்களில் வருகிறார். சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் வில்லியாக மிரட்டினார்.

பேட்ட படத்தில் முதல் தடவையாக ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்துள்ளார். இருவரின் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி சிம்ரன் இளமையாக இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இந்த படத்தை பார்த்த சிம்ரனும், ‘‘நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இது உண்மையா என்று என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்’’ என்று கூறியுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த நடிகை திரிஷா, ‘‘சிம்ரன் இளமையாகவும், அழகாகவும் இருக்கிறார்’’ என்று டுவிட்டரில் பாராட்டி உள்ளார். இதுபோல் மேலும் பல நடிகர்கள் சிம்ரனை வாழ்த்தி உள்ளனர். விக்ரமுடன் துருவ நட்சத்திரம், அரவிந்தசாமியுடன் வணங்கா முடி படங்களிலும் சிம்ரன் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன.

Next Story