வெள்ள நிதி திரட்ட நட்சத்திர கலைவிழா : மலையாள படப்பிடிப்புகள் 12 நாட்கள் ரத்து?


வெள்ள நிதி திரட்ட நட்சத்திர கலைவிழா : மலையாள படப்பிடிப்புகள் 12  நாட்கள்  ரத்து?
x
தினத்தந்தி 16 Nov 2018 10:45 PM GMT (Updated: 16 Nov 2018 5:50 PM GMT)

கேரளாவில் சமீபத்தில் பெய்த கன மழையால் வரலாறு காணாத அளவுக்கு சேதம் ஏற்பட்டது. பலர் பலியானார்கள். ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக மதிப்பிட்டனர்.

தமிழ் நடிகர்-நடிகைகள் வெள்ள நிவாரண நிதி வழங்கினார்கள். மலையாள நடிகர்-நடிகைகளும் நிதி கொடுத்தனர். 

வெள்ள நிவாரண நிதி திரட்ட நட்சத்திர கலை விழா நடத்தப்படும் என்று மலையாள நடிகர் சங்கமான அம்மா அறிவித்தது. அடுத்த மாதம் (டிசம்பர்) 7–ந் தேதி அபுதாபியில் இந்த விழா நடக்கிறது. நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், நடிகைகளும் இதில் கலந்துகொள்கிறார்கள். 

மலையாள திரைப்பட பெண்கள் சங்கத்தில் ரம்யா நம்பீசன், மஞ்சுவாரியர், கீது மோகன்தாஸ், பார்வதி, பத்மபிரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களையும் விழாவுக்கு அழைத்து உள்ளனர். நயன்தாரா தமிழில் அதிக படங்களில் நடித்து வருகிறார். மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். 

இவர் கேரளாவை சேர்ந்தவர். எனவே நயன்தாராவையும் நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்க அழைத்துள்ளனர். நடிகர், நடிகைகள் கலைநிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபடவும் நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்கவும் வசதியாக வருகிற 28–ந் தேதி முதல் அடுத்த மாதம் 9–ந் தேதிவரை படப்பிடிப்புகளை ரத்து செய்யும்படி மோகன்லால் தலைமையிலான மலையாள நடிகர் சங்கம், அங்குள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

Next Story