டப்பிங் யூனியனில் இருந்து பாடகி சின்மயி நீக்கம்


டப்பிங் யூனியனில் இருந்து பாடகி சின்மயி நீக்கம்
x
தினத்தந்தி 18 Nov 2018 11:45 PM GMT (Updated: 18 Nov 2018 11:01 PM GMT)

கவிஞர் வைரமுத்து மீது ‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. இவர் பாடுவது மட்டுமன்றி முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்து வந்தார்.

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த ‘96’ படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்து இருந்தார். டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்தார். இந்த சங்கத்துக்கு தலைவராக இருப்பவர் நடிகர் ராதாரவி. சமீபத்தில் பாலியல் புகார் கூறிய சின்மயியை ராதாரவி கண்டித்து இருந்தார்.

இந்த நிலையில் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை திடீரென்று நீக்கிவிட்டதாக சின்மயி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

“டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து என்னை நீக்கி உள்ளனர். நீக்கியது தொடர்பாக எந்த விதமான விளக்கமும் சங்கத்தில் இருந்து வரவில்லை. நீக்குவது குறித்து முன் அறிவிப்பும் கொடுக்கவில்லை. இதனால் இனிமேல் தமிழ் படங்களுக்கு என்னால் பின்னணி குரல் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது.

சங்கத்துக்கு நான் 2 ஆண்டுகளாக சந்தா கட்டவில்லை என்றும் அதனால்தான் என்னை நீக்கி இருப்பதாகவும் காரணம் சொல்லி உள்ளனர். சந்தா கட்டாதது குறித்தும் முன் அறிவிப்புகள் எனக்கு வரவில்லை. மீண்டும் டப்பிங் சங்கத்தில் என்னால் உறுப்பினராக முடியுமா? என்று தெரியவில்லை. தமிழில் 96 படம்தான் எனது கடைசி படமாக இருக்கப்போகிறது. தமிழில் எனது டப்பிங் பயணத்தை முடிப்பது மகிழ்ச்சியே. பை பை.”

இவ்வாறு சின்மயி கூறியுள்ளார்.

இதுகுறித்து டப்பிங் யூனியன் இணை செயலாளர் ராஜேந்திரன் கூறும்போது, “சின்மயி இரண்டு வருடமாக யூனியனுக்கு சந்தா செலுத்தவில்லை. சங்கம் மீது அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியும் பதில் தெரிவிக்கவில்லை. எனவேதான் சங்கத்தின் பொதுக்குழுவில் அவரை நீக்க முடிவு செய்யப்பட்டது” என்றார்.

Next Story