நடிகை சுஜா வாருணி திருமணம்: சிவாஜி பேரனை மணந்தார்


நடிகை சுஜா வாருணி திருமணம்: சிவாஜி பேரனை மணந்தார்
x
தினத்தந்தி 19 Nov 2018 11:30 PM GMT (Updated: 19 Nov 2018 11:14 PM GMT)

நடிகை சுஜா வாருணியின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. அவர் சிவாஜியின் பேரனை மணந்தார்.


தமிழில் ‘பிளஸ் டூ’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுஜா வாருணி. சேட்டை, இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை, குசேலன், தோழா, குற்றம் 23, மிளகா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கிடாரி படத்தில் வில்லியாக வந்தார். சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடி உள்ளார்.

டி.வி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். சுஜா வாருணிக்கும், சிங்க குட்டி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள சிவகுமாருக்கும் காதல் மலர்ந்தது. சிவகுமார், தயாரிப்பாளர் ராம்குமாரின் மகன் ஆவார். சிவாஜியின் பேரன். சுஜா வாருணியும், சிவகுமாரும் 12 வருடங்களாக காதலித்து வந்தனர். ஜோடியாகவும் சுற்றினர்.

சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கும் சென்று வந்தனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இவர்கள் திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோர்களும் சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து சுஜா வாருணி, சிவகுமார் திருமணம் நேற்று காலை சென்னை அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. சுஜா வாருணி கழுத்தில் சிவகுமார் தாலி கட்டினார்.

நடிகர்கள் சிவகுமார், எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, நடிகைகள் ராதிகா, லிசி, லதா, டைரக்டர் விஷ்ணுவர்த்தன் ஆகியோர் நேரில் வாழ்த்தினார்கள்.


Next Story