தாதா சோட்டா ஷகில் பெயரை சொல்லி நடிகர் சல்மான்கானுக்கு மிரட்டல்


தாதா சோட்டா ஷகில் பெயரை சொல்லி நடிகர் சல்மான்கானுக்கு மிரட்டல்
x
தினத்தந்தி 20 Nov 2018 10:15 PM GMT (Updated: 20 Nov 2018 9:22 PM GMT)

தாதா சோட்டா ஷகில் பெயரை சொல்லி, நடிகர் சல்மான்கானுக்கு மிரட்டல் வந்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.


நடிகர் சல்மான்கான் ஏற்கனவே சர்ச்சைகளில் சிக்கியவர். மான் வேட்டை வழக்கும் பாய்ந்தது. 52 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இப்போது அவருக்கு மிரட்டல் வந்துள்ளது. சல்மான்கானின் உதவியாளராக வேலை பார்க்கும் நிபாஸ் சாயா என்பவர் எண்ணுக்கு சமீபத்தில் தொலைபேசி அழைப்பு வந்தது.

அதில் பேசியவர் சல்மான்கானுடன் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றும் எனவே அவரது செல்போன் நம்பர் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். உதவியாளர் மறுத்து போன் இணைப்பை துண்டித்தார். ஆனாலும் தொடர்ந்து போன் செய்து சல்மான்கானை சந்திக்க ஏற்பாடு செய்யவில்லை என்றால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.

அதன் பிறகு சல்மான்கானின் தந்தை சலீம்கானின் செல்போன் நம்பருக்கு அந்த நபர் போன் செய்து சல்மான்கான் நம்பரை கேட்டு அவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். நான் பிரபல தாதா சோட்டா ஷகீல் ஆள். முக்கிய விஷயமாக சல்மான்கானிடம் பேச வேண்டும் என்று தொடர்ந்து மிரட்டியதால் மும்பை பாந்த்ரா போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் விசாரணை நடத்தி, அலகாபாத்தில் இருந்து மர்ம நபர் பேசியதை கண்டு பிடித்து நேரில் சென்று அவரை கைது செய்தனர். அவர் பெயர் நபி என்ற ஷேரா (வயது24) என்பது தெரிய வந்தது. சல்மான்கானை எதற்காக சந்திக்க முயன்றார்? சோட்டா ஷகீலுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்று விசாரணை நடக்கிறது.



Next Story