பேஷனாக்கி விட்டனர் - ‘மீ டூ’வை சாடிய மோகன்லால்


பேஷனாக்கி விட்டனர் - ‘மீ டூ’வை சாடிய மோகன்லால்
x
தினத்தந்தி 21 Nov 2018 10:15 PM GMT (Updated: 21 Nov 2018 7:35 PM GMT)

மீ டூ மூலம் குற்றம் சுமத்துவது தற்போது பேஷனாகி விட்டதாக, நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

‘மீ டூ’ இயக்கம் இந்திய திரையுலகை உலுக்கி வருகிறது. நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் சொல்லி இந்தி பட உலகை அதிர வைத்தார். தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்களின் தலைகள் மீ டூ வில் உருண்டன.

பாடகி சின்மயி மூலம் தமிழ் பட உலகையும் அது தாக்கியது. படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுக்காதவர்களை பழிவாங்க மீ டூவை தவறாக பயன்படுத்துவதாக விமர்சனங்களும் கிளம்பின. இந்த நிலையில் மலையாள நடிகர் மோகன்லாலும் மீ டூவை சாடி உள்ளார்.

துபாயில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து கூறியதாவது:-

“மீ டூ என்பது ஒரு பேஷனாகி விட்டது. அது வந்த வேகத்திலேயே விரைவில் மறைந்து விடும். மலையாள பட உலகில் நடிகைகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

மீ டூ ஒரு இயக்கம் என்கின்றனர். என்னை பொறுத்தவரை அதை இயக்கமாக பார்க்க கூடாது. ‘மீ டு’வின் ஆயுட் காலம் மிகவும் குறைவுதான். பாலியல் தொல்லைகள் திரையுலகில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் இருக்கிறது.” என்று மோகன்லால் கூறினார்.


Next Story