மீ டூ வை ‘பேஷன்’ என்பதா? - மோகன்லாலை கண்டித்த ரேவதி


மீ டூ வை ‘பேஷன்’ என்பதா? - மோகன்லாலை கண்டித்த ரேவதி
x
தினத்தந்தி 23 Nov 2018 10:00 PM GMT (Updated: 23 Nov 2018 9:29 PM GMT)

மீ டூ வை பேஷன் என்று கூறிய நடிகர் மோகன்லாலை, நடிகை ரேவதி கண்டித்துள்ளார்.

‘மீ டூ’ இயக்கம் திரையுலகை உலுக்கி வருகிறது. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகளும் பெண் இயக்குனர்களும் தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகிறார்கள். தமிழ், இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இதில் சிக்கி உள்ளனர். மலையாள நடிகர் சங்கம் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கிறது என்று ரேவதி, பார்வதி, பத்மபிரியா, ரிமா கல்லிங்கல் ஆகியோர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் நடிகர் மோகன்லால் மீ டு வை சாடினார். அவர் கூறும்போது, “மீ டூ என்பது ஒரு பேஷனாகி விட்டது. அது வந்த வேகத்திலேயே மறைந்து விடும். மீ டூவை இயக்கம் என்கின்றனர். அதை இயக்கமாக பார்க்க கூடாது. ‘மீ டு’வின் ஆயுட் காலம் குறைவுதான். பாலியல் தொல்லைகள் திரையுலகில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் இருக்கிறது.” என்றார்.

இதனால் மோகன்லாலுக்கு அவரது பெயரை குறிப்பிடாமல் நடிகை ரேவதி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறும்போது, “உணர்வுகளோடு பேசுவது பற்றி சிலருக்கு எப்படி பாடம் நடத்துவது? பிரபலமான நடிகர் ஒருவர் மீ டூ என்பது ட்ரெண்ட் என்று சொல்லி இருக்கிறார். இயக்குனர் அஞ்சலி மேனன் சொன்னதுபோல் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களுக்கு பாலியல் கொடுமைகள் பற்றியும் அதை வெளியில் சொல்வதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் தெரியாது.”

இவ்வாறு கூறியுள்ளார்.

Next Story