வளசரவாக்கத்தில் நடிகை தற்கொலை வழக்கில் தம்பி, காதலனிடம் போலீஸ் விசாரணை


வளசரவாக்கத்தில் நடிகை தற்கொலை வழக்கில் தம்பி, காதலனிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 29 Nov 2018 9:45 PM GMT (Updated: 29 Nov 2018 8:27 PM GMT)

வளசரவாக்கத்தில் நடிகை தற்கொலை வழக்கில் தம்பி, காதலனிடம் போலீஸ் விசாரணை

பூந்தமல்லி,

வளசரவாக்கத்தில் நடிகை தற்கொலை வழக்கில் அவருடைய காதலன் மற்றும் தம்பியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’, ‘எக்ஸ் வீடியோஸ்’, ‘அகோரி’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து இருப்பவர் ரியாமிகா(வயது 26). இவர், தனது தம்பி பிரகாசுடன், சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம், ராதா நகர், 3-வது தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் ரியாமிகா, தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வளசரவாக்கம் போலீசார், ரியாமிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

நடிகை ரியாமிகாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். இதுதொடர்பாக அவருடைய தம்பி பிரகாஷ், காதலன் தினேஷ் ஆகியோரிடம் விசாரித்தோம். அதில், நடிகை ரியாமிகா, படவாய்ப்பு இல்லாமல் சில மாதங்களாக மனவேதனையில் இருந்ததாக தெரிவித்தனர்.

ரியாமிகாவின் அறையை சோதனை செய்தபோது அங்கு குறிப்பிடும் வகையில் எந்த தடயமும், கடிதமும் கிடைக்கவில்லை. அவரது செல்போனில் உள்ள வீடியோக்கள், ஆடியோக்கள் மற்றும் அவர் கடைசியாக யாரிடம் பேசினார்?. இதுவரை அவருடன் யாரெல்லாம் பேசி உள்ளனர்? என்பது போன்ற விவரங்களை ஆய்வு செய்து வருகிறோம். அவர் கடைசியாக போனில் பேசியவர்களிடமும் விசாரித்துவருகிறோம்.

ரியாமிகாவின் தம்பி பிரகாசுக்கு நிரந்தர வேலை இல்லை. இதனால் ரியாமிகாவின் தற்கொலைக்கு பொருளாதார நெருக்கடியே முக்கிய காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. அதே நேரத்தில் தற்கொலைக்கு முன்பு காதலன் தினேஷ், ரியாமிகாவிடம் சரியாக பேசவில்லை. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அதோடு தம்பி பிரகாசும் ரியாமிகாவுடன் தகராறு செய்து உள்ளார்.

இந்த மூன்று காரணங்களுக்காக நடிகை ரியாமிகா தற்கொலை செய்துகொண்டாரா? என்று விசாரித்து வருகிறோம். இருப்பினும் முழுமையான விசாரணைக்கு பிறகுதான் அவரது தற்கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

ரியாமிகா குறித்து விசாரித்தபோது அவரது சொந்த ஊர் ஈரோடு என்பது தெரிந்தது. என்ஜினீயரிங் முடித்து உள்ளார். சினிமாவில் கதாநாயகியாக நடித்து பெயரும், புகழும் பெறவேண்டும் என சிறு வயது முதலே அவருக்கு ஆசை. இதனால்தான் அவர் சினிமாவுக்குள் நுழைந்து கதாநாயகியாக நடித்தார்.

இதுவரை 3 படங்களில் நடித்து உள்ளார். அவருடைய தம்பி பிரகாஷ், உதவி இயக்குனராக உள்ளார். தற்போது அவருக்கும் சரிவர படவாய்ப்புகள் இல்லை. கடந்த 6 மாதங்களாக சென்னையைச்சேர்ந்த தினேஷ் என்பவரை ரியாமிகா காதலித்து வந்துள்ளார். தினேஷ் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக உள்ளார். ரியாமிகா அங்கு சென்றபோதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

சரியாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ரியாமிகா, தற்போதுதான் ‘அனுநாகி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்தநிலையில் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து ரியாமிகாவின் தம்பி, அவரது காதலன் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Next Story