புற்றுநோய் சிகிச்சை முடிந்து சோனாலி பிந்த்ரே மும்பை திரும்பினார்


புற்றுநோய் சிகிச்சை முடிந்து சோனாலி  பிந்த்ரே மும்பை  திரும்பினார்
x
தினத்தந்தி 3 Dec 2018 10:30 PM GMT (Updated: 3 Dec 2018 6:48 PM GMT)

அமெரிக்காவில் தங்கி பெற்ற சோனாலி பிந்த்ரே சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பி உள்ளார்.

தமிழில் காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் படங்களில் கதாநாயகியாக நடித்த சோனாலி பிந்த்ரே, இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். 2002–ல் இயக்குனரும் தயாரிப்பாளருமான கோல்டி பெல்லை திருமணம் செய்து சினிமாவில் இருந்து ஒதுங்கினார். 43 வயதாகும் சோனாலி பிந்த்ரே தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். 

இதற்காக அமெரிக்காவில் தங்கி தலையை மொட்டை அடித்து சிகிச்சை பெற்றார். கீமோ தெரபி சிகிச்சையால் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறினார். தற்போது சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பி உள்ளார். மும்பை புறப்படுவதற்கு முன்பு இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவை பகிர்ந்தார். 

அதில் ‘‘என் இதயம் இருக்கும் இடத்தை நோக்கி புறப்பட்டு விட்டேன். இந்த உணர்வை வார்த்தையால் விவரிக்க முடியவில்லை. எனது நண்பர்கள், குடும்பத்தினரை காண ஆர்வமாக இருக்கிறேன். எனது போராட்டம் முழுமையாக தீரவில்லை என்றாலும் சிறிய இடைவெளி கிடைத்து இருப்பதில் மகிழ்ச்சி’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

நேற்று அதிகாலை விமானம் மூலம் சோனாலி பிந்த்ரே மும்பை வந்தார். கணவர் கோல்டி பெல்லும் உடன் வந்தார். கோல்டி பெல் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘சோனாலி பிந்த்ரே உடல் நலம் தேறி வருகிறார். இனிமேல் சிகிச்சைக்காக நியூயார்க் செல்ல வேண்டியது இல்லை. வழக்கமான பரிசோதனைகள் செய்து கொண்டால் போதும். சோனாலி திடமான உறுதியான பெண். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன்’’ என்றார்.

Next Story