தேர்தலில் ‘சீட்’ தராத விரக்தி வீட்டை காலி செய்த நடிகை ரம்யா


தேர்தலில் ‘சீட்’ தராத விரக்தி வீட்டை காலி செய்த நடிகை ரம்யா
x
தினத்தந்தி 5 Dec 2018 9:45 PM GMT (Updated: 5 Dec 2018 5:40 PM GMT)

நடிகை ரம்யா தான் வசித்த வீட்டை திடீரென்று காலி செய்து வெளியேறியுள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த ரம்யா, தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்தார். சில வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகவும் தேர்வானார். அதன்பிறகு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். 

இதனால் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். கட்சியில் தனக்கு எதிராக சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் சில மாதங்களாக அவரை யாரும் தொடர்புகொள்ள முடியவில்லை. பின்னர் டுவிட்டரில் வந்து நான் மாயமாகவில்லை. அமெரிக்காவில் இருக்கிறேன் என்று பதிவிட்டார். 

தற்போது ரம்யா மாண்டியாவில் வசித்த வீட்டை திடீரென்று காலி செய்து வெளியேறியுள்ளார். வீட்டின் முன்னால் இரண்டு லாரிகளை நிறுத்தி உடைமைகளை அவற்றில் அள்ளிப்போட்டு கொண்டு சென்றுவிட்டார். மாண்டியாவில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் அவர் போட்டியிட காங்கிரஸ் கட்சி டிக்கெட் வழங்கவில்லை. 

இந்த தொகுதியில்தான் 2013 இடைத்தேர்தலில் வென்றார். ஆனால் 2014–ல் நடந்த பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்தார். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட ரம்யா விரும்பினார். ஆனால் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்த அவர் வீட்டை காலி செய்ததாக கூறப்படுகிறது.

Next Story