உத்தரகாண்டில் 7 மாவட்டங்களில் கேதர்நாத் திரைப்படத்தை வெளியிட தடை


உத்தரகாண்டில் 7 மாவட்டங்களில் கேதர்நாத் திரைப்படத்தை வெளியிட தடை
x
தினத்தந்தி 7 Dec 2018 7:37 AM GMT (Updated: 7 Dec 2018 7:37 AM GMT)

உத்தரகாண்டின் 7 மாவட்டங்களில் கேதர்நாத் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோவில் பகுதியில் 2013–ல் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதை மையமாக வைத்து இந்தியில் ‘கேதர்நாத்’ என்ற படம் தயாராகி உள்ளது. இதில் சுஷாந்த் சிங் ராஜ்புத் கதாநாயகனாகவும், சயீப் அலிகான் மகள் சாரா அலிகான் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். அபிஷேக் கபூர் இயக்கி உள்ளார்.

காதல்தான் புனிதப்பயணம் என்ற வாசகம் இந்த படத்தில் உள்ளது. இது இந்து மதத்தையும், இந்து மக்கள் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும் கேதர்நாத்தையும் அவமதிப்பதுபோல் உள்ளது. படத்துக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் இந்து அமைப்புகள் எச்சரித்தன.

படத்துக்கு தடைவிதிக்கும்படி இந்து சேனா அமைப்பின் தலைவர் பிரகாஷ் ராஜ்புத் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். இது விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என்றும், வழக்கு தொடர்ந்தவர் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.  

இந்த நிலையில், போராட்டம் காரணமாக 7 மாவட்டங்களில் படத்தை திரையிட அனுமதிக்க உத்தரகாண்ட் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சட்டம், ஒழுங்கை கருத்தில் கொண்டு டேராடூன், ஹரித்வார், நைனிடால், உதம் சிங் நகர், பாவுரி மற்றும் அல்மோரா ஆகிய மாவட்டங்களில்  படத்தை வெளியிட அந்தந்த மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள் தடை விதித்துள்ளனர்.

Next Story