“ஒரே மாதிரியாக நடித்து அலுத்து விட்டது” -காஜல் அகர்வால்
ஒரே மாதிரியாக நடித்து அலுத்து விட்டது என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
கடந்த 3 வருடங்களாக, ‘கால்ஷீட்’ கொடுக்க முடியாத அளவுக்கு கைவசம் படங்கள் வைத்திருந்த காஜல் அகர்வால், இந்த வருடம் இறுதியில் திடீர் என்று காணாமல் போனார். இதுபற்றி கேட்டபோது, காஜல் அகர்வால் மனம் திறந்து பேசினார். அவர் கூறியதாவது:-
“கடந்த சில ஆண்டுகளாக நான் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக, கைவசம் நிறைய படங்கள் வைத்து நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த வருட ஆரம்பம் எனக்கு நன்றாகவே இருந்தது. அதன்பிறகு என் உடல் நலம் பாதிக்கப்பட்டது. 3 மாதங்கள் ஓய்வில் இருந்தேன். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை மட்டும் முடித்துக் கொடுத்தேன். புதிய பட வாய்ப்புகள் எதையும் ஏற்கவில்லை.
எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது. அதன் காரணமாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். காலையில் நன்றாக இருப்பேன். மாலை ஆனதும் காய்ச்சல் வந்து விடும். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து என்னை குணப்படுத்தி விட்டார்கள். உடனே படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டாம். கொஞ்சம் ஓய்வு எடுங்கள் என்று டாக்டர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதன்படி, ஓய்வு எடுத்து வருகிறேன். புது வருடத்தில், ஜனவரி மாதம் பிறந்ததும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்.
தெலுங்கில் 2 புதிய படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறேன். தமிழில் ஒரு படம் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. ஒரே மாதிரியாக நடித்து அலுத்து விட்டது. இனிமேல் வித்தியாசமான கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். கதாநாயகர்களை பிரித்துப் பார்ப்பதில்லை. வயதான கதாநாயகர்களுடனும் நடிக்கிறேன். இளம் கதாநாயகர்களுடனும் நடிக்கிறேன்.
எனக்கு ரசிகர் மன்றம் அமைக்க சிலர் முன்வந்தார்கள். “ரசிகர்களை மதிக்கிறேன். மன்றம் எல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டேன்.”
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
Related Tags :
Next Story