வைரவியாபாரி கொலை: பிரபல டி.வி. நடிகை திடீர் கைது


வைரவியாபாரி கொலை: பிரபல டி.வி. நடிகை திடீர் கைது
x
தினத்தந்தி 9 Dec 2018 11:00 PM GMT (Updated: 9 Dec 2018 9:59 PM GMT)

வைரவியாபாரி கொலை தொடர்பாக, பிரபல டி.வி. நடிகை திடீரென கைது செய்யப்பட்டார்.

மும்பை காட்கோபர் பந்த் நகரை சேர்ந்த பிரபல வைர வியாபாரி ராஜேஷ்வர். இவர் கடந்த மாதம் 28-ந் தேதி விக்ரோலியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. ராஜேஷ்வரின் மனைவி போலீசில் புகார் செய்தார். டிரைவரிடம் விசாரித்தபோது பண்ட் நகர் மார்க்கெட் பகுதியில் தன்னை இறக்கி விடும்படி சொல்லி வேறுகாரில் ஏறி சென்றார் என்றார்.

இந்த நிலையில் பன்வெல் அருகே உள்ள அணைக்கட்டு பகுதியில் ராஜேஷ்வர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது. கொடூரமாக அவர் கொலை செய்யப்பட்டு இருந்தார். ராஜேஷ்வர் செல்போன் நம்பரை வைத்து போலீசார் விசாரித்தபோது அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை கண்டுபிடித்தனர்.

மராட்டிய மாநில அமைச்சர் பிரகாஷ் மேத்தாவின் முன்னாள் உதவியாளர் சச்சின் பவார். டி.வி. நடிகையும் மாடல் அழகியுமான டிவோலினா பட்டாச்சார்ஜி உள்பட மேலும் 3 பேருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்களை பிடித்து வந்து காட்கோபர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக 3 மணிநேரம் விசாரணை நடத்தி பின்னர் கைது செய்தனர்.

விசாரணை விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர். டிவோலினா, ‘சாத் நிபானா சாதியா’ உள்பட பல டி.வி. தொடர்களில் நடித்து பிரபலமானவர். மேலும் சில நடிகைகளுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்து விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.



Next Story