இந்திய அளவில் செல்வாக்கான 50 பேர் பட்டியலில் நயன்தாரா


இந்திய அளவில் செல்வாக்கான 50 பேர் பட்டியலில் நயன்தாரா
x
தினத்தந்தி 10 Dec 2018 11:31 PM GMT (Updated: 10 Dec 2018 11:31 PM GMT)

இந்திய அளவில் செல்வாக்கான 50 பேர் பட்டியலில் நயன்தாரா இடம்பெற்றுள்ளார்.

நாட்டில் இளம் வயதில் மக்களை கவர்ந்த செல்வாக்கான 50 பேர் பட்டியலை ஜிகியூ என்ற இதழ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 40 வயதுக்குள் பொழுதுபோக்கு, விளையாட்டு, வியாபாரம் உள்பட பல்வேறு துறைகளில் பிரபலமாக இருப்பவர்கள் இந்த பட்டியலில் இடம்பெறுவார்கள். 2018-ம் ஆண்டின் செல்வாக்குள்ள இளம் இந்தியர்கள் 50 பேர் பட்டியல் இப்போது வெளியாகி உள்ளது.

இந்த பட்டியலில் 33 வயதான நடிகை நயன்தாராவும் இடம்பெற்று உள்ளார். சமீபத்தில் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அதிக வருமானம் ஈட்டிய 100 இந்தியர்கள் பட்டியலிலும் அவர் இருந்தார். நயன்தாரா சமீபத்தில் நடித்து திரைக்கு வந்த அனைத்து படங்களும் வசூல் பார்த்தன. தென்னிந்திய திரையுலகில் நம்பர்-1 இடத்தில் இருக்கிறார். லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர். ரூ.6 கோடி சம்பளம் வாங்குகிறார். எந்த தென்னிந்திய நடிகையும் இவ்வளவு தொகை வாங்கியது இல்லை.

டைரக்டர் பா.ரஞ்சித்தும் இந்த பட்டியலில் உள்ளார். இவர் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா படங்களை டைரக்டு செய்துள்ளார். சமூக நீதிக்காக குரல் கொடுத்தும் வருகிறார். தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ள பார்வதிக்கும் 50 பேர் பட்டியலில் இடம் கிடைத்து உள்ளது. இவர் பாலியல் தொல்லைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

நடிகைகள் டாப்சி, அலியாபட், இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.


Next Story