பயங்கரவாதியாக மாறிய இந்தி நடிகர் என்கவுண்ட்டரில் பலி


பயங்கரவாதியாக மாறிய இந்தி நடிகர் என்கவுண்ட்டரில் பலி
x
தினத்தந்தி 13 Dec 2018 11:45 PM GMT (Updated: 13 Dec 2018 7:05 PM GMT)

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் சண்டை நடந்து வருகிறது.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் காஷ்மீரில் உள்ள இளைஞர்களையும் மாணவர்களையும் மூளைச்சலவை செய்து பாதுகாப்பு படையினருக்கு எதிராக போராட தூண்டி வருகிறார்கள். 

இந்த நிலையில் பந்திபோர பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் அந்த வீட்டை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டனர். பயங்கரவாதிகளுடன் 18 மணிநேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

உடல்கள் மீட்கப்பட்டபோது அதில் 2 பேர் சிறுவர்கள் என்பது தெரியவந்தது. ஒரு சிறுவன் பெயர் பிலால். இவர் ஹாஜின் பந்திபோரா பகுதியை சேர்ந்தவர், 9–ம் வகுப்பு படித்து வந்தார். இன்னொரு சிறுவன் பெயர் முடாஸீர் ரஷித் பாரே. இருவரும் நண்பர்கள். 

இவர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் வீட்டை விட்டு வெளியேறினார்கள். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் தேடி வந்தனர். கொல்லப்பட்ட பிலால் இந்தியில் ஷாகித் கபூர், தபு, ஸ்ரத்தா கபூர் ஆகியோர் நடிப்பில் 2 வருடங்களுக்கு முன்பு வெளியான ஹைதர் என்ற படத்தில் நடித்துள்ளார். உள்ளூர் நாடகங்களிலும் நடித்து வந்தார். 

சமீபத்தில் பிலால் ஏ.கே47 துப்பாக்கி மற்றும் கத்தியுடன் இருக்கும் படம் சமூகவலைத்தளத்தில் வெளியானதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியானார்கள். அதன்பிறகுதான் அவர் ‘லஸ்கர் இ தொய்பா’ பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து இருப்பது தெரியவந்தது.

Next Story