அதிக படங்களை திரையிட அனுமதி: நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு


அதிக படங்களை திரையிட அனுமதி: நடிகர்  விஷ்ணு விஷால்  எதிர்ப்பு
x
தினத்தந்தி 14 Dec 2018 11:15 PM GMT (Updated: 14 Dec 2018 5:57 PM GMT)

‘ராட்சசன்’ படத்துக்கு பிறகு விஷ்ணுவிஷால் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சிலுக்குவார் பட்டி சிங்கம்.’ இதில் கதாநாயகியாக ரெஜினா நடித்துள்ளார்.

‘சிலுக்குவார் பட்டி சிங்கம்’ படத்தை செல்லா அய்யாவு டைரக்டு செய்துள்ளார்.  தயாரிப்பாளர் சங்கம் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகையில் அதிக படங்களை திரையிட அனுமதி அளித்துள்ளது. இதற்கு விஷ்ணுவிஷால் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

‘‘எனது சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை ஏற்கனவே திரைக்கு கொண்டு வர முயற்சித்து வேறு படங்கள் வெளியானதால் தள்ளிவைக்கும் நிலைமை ஏற்பட்டது. இறுதியாக வருகிற 21–ந்தேதி வெளியிட தயாரிப்பாளர் சங்கம் அனுமதி அளித்தது. அப்போது வேறு புதிய படங்கள் வராது என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

அதன்பிறகு விஜய்சேதுபதியின் சீதக்காதி படத்தையும் அதே நாளில் திரையிட ஒப்புதல் கேட்டனர். நான் சரி என்றேன். அதன்பிறகு அடங்க மறு, மாரி–2, கனா என்று மேலும் பெரிய பட்ஜெட் படங்களை வெளியிட அனுமதி கொடுத்து விட்டனர். தயாரிப்பாளர் சங்கம் படங்கள் வெளியீட்டுக்கு தேதிகள் ஒதுக்குவதில் உறுதியாக இல்லாமல் போனது வருத்தம்.

இனிமேல் அதன் முடிவுக்கு மற்றவர்கள் கட்டுப்படுவார்களா? என்பது கேள்விக்குறி. எத்தனை படம் வந்தாலும் சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்துக்கு வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளேன். நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது.

இவ்வாறு விஷ்ணுவிஷால் கூறினார்.

Next Story