‘திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்


‘திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்
x
தினத்தந்தி 14 Dec 2018 11:30 PM GMT (Updated: 14 Dec 2018 6:00 PM GMT)

பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கி‌ஷம் உள்ளிட்ட படங்களை இயக்கிவர் சேரன்.

சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், ராமன் தேடிய சீதை, மாயக்கண்ணாடி போன்ற சில படங்களில் சேரன் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார்.

கடைசியாக ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை இயக்கினார். சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது ‘திருமணம்’ என்ற புதிய படத்தை இயக்கி நடித்துள்ளார். இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இன்னொரு நாயகனாகவும் நாயகியாக காவ்யா சுரேசும் நடித்துள்ளனர்.  தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், மனோபாலா, பால சரவணன், சுகன்யா, சீமா ஜி. நாயர், அனுபமா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் முதல் தோற்றம் மற்றும் படத்தின் பெயரை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு முதல் தோற்றத்தை வெளியிட்டார்.

விழாவில் சேரன் பேசியதாவது:–

‘‘திருமணம் படத்தை 4 வருடங்களுக்கு பிறகு இயக்கி இருக்கிறேன். இந்த இடைவெளியில் நிறைய அனுபவங்களை பெற்று விட்டேன். இந்த அனுபவங்கள் என்னை 10 வருடங்களுக்கு வழிநடத்தும். ஒரு நடுத்தர குடும்பத்தில் பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கி திருமணம் நடப்பது வரையிலான சம்பவங்களே படத்தின் கதை. விஜய் சேதுபதி எனது படத்தில் நடிப்பதாக கூறியிருக்கிறார். அவர் எப்போது வருகிறாரோ அப்போது அவரை வைத்து படம் இயக்குவேன்.’’

இவவாறு சேரன் கூறினார்.

Next Story