மலையாள பட உலகில் பரபரப்பு போதைப்பொருளுடன் நடிகை கைது
மலையாள பட உலகில் நடிகை ஒருவர் போதைப் பொருள் விவகாரத்தில் கைதாகி உள்ளார்.
திரையுலகை சேர்ந்த சிலர் நடத்தும் விருந்து நிகழ்ச்சிகளில் போதைப் பொருள் தாராளமாக புழங்குவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன. ஐதராபாத்தில் போதைப் போருள் சர்ச்சை குறித்து தெலுங்கு நடிகர்களிடம் விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது மலையாள பட உலகும் இதில் சிக்கி உள்ளது. நடிகை ஒருவர் போதைப் பொருள் விவகாரத்தில் கைதாகி உள்ளார். அவரது பெயர் அஸ்வதி பாபு. இவர் மலையாள படங்களிலும், டி.வி. தொடர்களிலும் நடித்து இருக்கிறார். கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார்.
அஸ்வதி பாபு வீட்டில் போதைப் பொருள் பதுக்கி வைத்து இருப்பதாக திற்காக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து அந்த வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ‘எம்டிஎம்ஏ’ என்ற போதைப் பொருள் இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினார்கள்.
பின்னர் நடிகை அஸ்வதி பாபுவை போலீசார் கைது செய்தனர். அவரது கார் டிரைவர் பினோய் ஆபிரகாமும் கைதானார். இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது பெங்களூருவில் இருந்து போதைப் பொருளை கடத்தி வந்து வீட்டில் வைத்து விற்று வந்தது தெரியவந்தது.
அவரிடம் போதைப்பொருளை வாங்கியவர்கள் யார்? யார்? என்ற விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. மற்ற நடிகர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது. போதைப் பொருள் பதுக்கிய குற்றத்துக்காக நடிகை கைதானது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story