நடிகை லீனா மரியாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்


நடிகை லீனா மரியாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 18 Dec 2018 10:30 PM GMT (Updated: 18 Dec 2018 5:21 PM GMT)

நடிகை லீனா மரியாவுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நடிகை லீனா மரியா பால். இவர் மோகன்லாலின் ரெட் சில்லீஸ், ஹஸ்பெண்ட்ஸ் இன் கோவா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ‘மெட்ராஸ் கபே’ என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார். சென்னையில் உள்ள வங்கியில் ரூ.18 கோடி மோசடி செய்ததாகவும் கைதானவர்.

கொச்சியில் லீனா மரியா பாலுக்கு சொந்தமான பியூட்டி பார்லரில் பைக்கில் வந்த 2 பேர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். போலீசார் விசாரணை நடத்தினார்கள். லீனா மரியாவிடமும் வாக்குமூலம் பெற்றனர். அப்போது சில வாரங்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த மாபியா கும்பல் தலைவன் ரவி புஜாராவிடம் இருந்து தனக்கு போன் வந்ததாகவும், ரூ.25 கோடி கேட்டு அவன் மிரட்டினான் என்றும் அவர் கூறியிருந்தார்.

ரவி புஜாரா ஆட்களை அனுப்பி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் லீனா மரியாவுக்கு இன்டர்நெட் போன் அழைப்பு மூலம் மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. போனில் பேசியவன் பியூட்டி பார்லரை மூட வேண்டும் இல்லாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று கூறியுள்ளான். இதுகுறித்தும் போலீசில் அவர் புகார் செய்துள்ளார்.

Next Story