இளையராஜா இசை நிகழ்ச்சி மூலம் ரூ.10 கோடி நிதி திரட்டும் பட அதிபர் சங்கம்


இளையராஜா இசை நிகழ்ச்சி மூலம் ரூ.10 கோடி நிதி திரட்டும் பட அதிபர் சங்கம்
x
தினத்தந்தி 18 Dec 2018 11:15 PM GMT (Updated: 18 Dec 2018 5:28 PM GMT)

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதற்காக நிதி திரட்ட முடிவு செய்து இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இத்தனை ஆண்டுகாலம் இசை உலகில் தொடர் சாதனைகள் நிகழ்த்தி வரும் இளையராஜாவை கவுரவிக்கும் விழாவாகவும் இதை நடத்துகின்றனர்.

பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த விழா நடக்கிறது. இளையராஜா தனது குழுவினருடன் சேர்ந்து இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த விழாவில் கலந்துகொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை அழைக்கின்றனர். நடிகர்கள் விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜீவா, விஜயகுமார், ஆனந்தராஜ், டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், விக்ரமன் மற்றும் நடிகைகள் ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருக்கு நேரில் அழைப்பிதழ் கொடுத்து உள்ளனர். தொடர்ந்து திரையுலகினருக்கு அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி நடிகர்களையும் அழைக்க உள்ளனர். இசை விழா மூலம் ரூ.10 கோடிக்கு மேல் நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளனர். விழாவையொட்டி பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய 2 நாட்களும் அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story