ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படம் ஆணவ கொலை கதையா?


ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படம் ஆணவ கொலை கதையா?
x
தினத்தந்தி 18 Dec 2018 11:30 PM GMT (Updated: 18 Dec 2018 5:36 PM GMT)

பேட்ட படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் பற்றி பல்வேறு தகவல்கள் பரவுகின்றன.

ரஜினிகாந்த் முந்தைய படங்களான ‘கபாலி’யில் மலேசிய தாதாவாகவும், ‘காலா’வில் மும்பை தாதாவாகவும் நடித்து இருந்தார். 2.0 படத்தில் எந்திரனாகவும், விஞ்ஞானியாகவும் இரு வேடங்களில் வந்தார். அடுத்து அவர் நடித்து பொங்கலுக்கு வெளியாக உள்ள பேட்ட படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் பற்றி பல்வேறு தகவல்கள் பரவுகின்றன.

மதுரையில் நடக்கும் கதை என்றும், கல்லூரி விடுதி வார்டனாக நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. இதை உறுதிபடுத்துவதுபோல் வட இந்தியாவில் கல்லூரிகளில் படப்பிடிப்புகளை நடத்தினர். இமயமலை அடிவாரத்தில் படப்பிடிப்புகள் நடந்ததாலும் போலீஸ் வாகனத்தில் ரஜினிகாந்த் செல்வதுபோல் புகைப்படம் வெளியானதாலும் இது பயங்கரவாதிகளுடன் நடக்கும் மோதல் கதை என்று கூறினர்.

இப்போது ஆணவ கொலைகளை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளதாக இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஆணவ கொலைகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. உடுமலைப்பேட்டை சங்கர் கொலையுண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதுவரை 80-க்கும் மேற்பட்ட ஆணவ கொலைகள் நடந்துள்ளதாக புள்ளி விவரம் சொல்கிறது.

இந்த கொலைகளை பற்றிய படமாக பேட்ட தயாராகி உள்ளது என்று சமூக வலைத்தளத்தில் தகவல் பரவுகிறது. ரஜினிகாந்த் கல்லூரி வார்டன் என்பதால் அங்கு நடக்கும் காதல் மற்றும் கொலையை இந்த படம் அலசி இருப்பதாக கூறுகின்றனர். ஆனாலும் படக்குழுவினர் இதை உறுதிப்படுத்தவில்லை.

Next Story