முதல் படம் ஓடாமல் இருந்தால் “நடுத்தெருவில் நின்றிருப்பேன்” -நடிகர் தனுஷ்
எனது முதல் படம் ஓடாமல் இருந்தால் நடுத்தெருவில் நின்றிருப்பேன் என்று நடிகர் தனுஷ் பேசினார்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி-2 படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி தனுஷ் அளித்த பேட்டி வருமாறு:-
“எனக்கு பிடித்த படம் மாரி. இப்போது அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்து இருக்கிறேன். மாரி நல்லவனும், கெட்டவனும் இல்லாத கதாபாத்திரம். ஜாலியான பொழுதுபோக்கு படமாக இருக்கும். குடும்பத்தோடு ரசிக்கலாம். சாய்பல்லவி, வரலட்சுமி ஆகியோருடன் முதல் முறையாக நடித்ததில் மகிழ்ச்சி.
இதில் இளையராஜா ஒரு பாடலை பாடி இருப்பது பெரிய ஆசீர்வாதம். யுவன்சங்கர் ராஜா 3 அருமையான பாடல்களை தந்துள்ளார். அவரை சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தூரத்தில் இருந்து ரசித்து இருக்கிறேன். துள்ளுவதோ இளமை படத்தில் நான் அறிமுகமானேன். அடையாளமே இல்லாத 6 புதுமுகங்களை வைத்து எடுத்தனர். அந்த படத்துக்கு அடையாளம் கொடுத்தது யுவன்சங்கர் ராஜாவின் இசைதான்.
அந்த படம் ஓடாவிட்டால் நிஜமாகவே நாங்கள் நடுத்தெருவில்தான் நின்று இருப்போம். அந்த சூழ்நிலையில்தான் அன்றைக்கு இருந்தோம். யுவன்சங்கர் ராஜாவுக்கும், அவரது இசைக்கும் நாங்கள் கடமைப்பட்டு இருக்கிறோம். துள்ளுவதோ இளமை, காதல்கொண்டேன் படங்கள் வெற்றி பெற்றதற்கு யுவன்சங்கர் ராஜாவின் இசைதான் காரணம்.
மாரி-2 வெற்றி பெற்றால் மாரி-3 எடுப்பது குறித்து யோசிப்போம்.
இவ்வாறு தனுஷ் கூறினார்.
Related Tags :
Next Story