இணையதளங்களில் ‘மாரி-2’ படத்தை வெளியிட தடை


இணையதளங்களில் ‘மாரி-2’ படத்தை வெளியிட தடை
x
தினத்தந்தி 20 Dec 2018 11:30 PM GMT (Updated: 20 Dec 2018 6:51 PM GMT)

மாரி-2 படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

தமிழ் பட உலகில் திருட்டு வி.சி.டி. பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. இப்போது புதிய படங்கள் திருட்டுத்தனமாக இணையதளங்களிலும் உடனுக்குடன் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகின்றன. ரஜினிகாந்தின் கபாலி, காலா, 2.0., விஜய்யின் மெர்சல், சர்கார், விஷாலின் சண்டக்கோழி-2 உள்பட முன்னணி நடிகர்கள் படங்கள் அனைத்தும் தியேட்டரில் ரிலீசான சில மணிநேரத்திலேயே இணையதளங்களிலும் வந்தன.

இவற்றை தடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், செல்போனில் படம் எடுப்பதை தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுத்தும் கட்டுப்படுத்த முடியவில்லை.

தனுஷ்-சாய்பல்லவி நடித்துள்ள மாரி-2 படம் இன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கும்படி தனுசின் வுண்டர்பார் பட நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், மாரி-2 படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். 16 ஆயிரத்து 135 இணையதளங்களில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மாரி-2 படம் கடந்த 2015-ல் வெளியான மாரி படத்தின் 2-ம் பாகமாக தயாராகி உள்ளது. பாலாஜி மோகன் இயக்கி உள்ளார். வரலட்சுமி, டோவினோ தாமஸ், வித்யா பிரதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

Next Story