‘‘பட அதிபர் சங்கத்தில் மோதல் வேண்டாம்’’ – நடிகர் பார்த்திபன்


‘‘பட அதிபர் சங்கத்தில் மோதல் வேண்டாம்’’ – நடிகர் பார்த்திபன்
x
தினத்தந்தி 26 Dec 2018 11:45 PM GMT (Updated: 26 Dec 2018 5:39 PM GMT)

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவராக நடிகர் பார்த்திபன் நியமிக்கப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘‘நான் தயாரிப்பாளர் ஆனது என் படைப்பின் சுதந்திரத்திற்கே. இச்சங்கத்தில் இதுவரை நான் கண்டதெல்லாம், சிறிய பலனுக்கு கூட சீரிய முயற்சி எடுக்கப்பட்டதென்னவோ உண்மை. காணாதது, ஊழல் மற்றும் உபத்தொழிலாய் பதவிகளை பயன்படுத்தி யாரும் லஞ்ச லாபம் அடைவது. அதை நான் என்றாவது அறிந்திருந்தால் அன்றே பதவி விலகியிருப்பேன்.

நியாயம் கேட்க நீதிமன்றத்தில் பல வாசல்கள் உண்டு. முடிவாய் உரிமையை நன்முறையில் நிலைநாட்ட தேர்தல் என்ற ஒன்று மிக அருகில் இருக்கையில் பூட்டு போட்டு வன்முறையில் ஈடுபடுவது அநாகரிகமானது என்பதை நான் மட்டுமல்ல, நீதிமன்றமும் வன்மையாக கண்டித்துள்ளது.

சகலரிடமும் சுமுகமாக நேசக்கரம் நீட்டுபவன் நான். வன்முறையில் துளியும் நம்பிக்கை இல்லாதவன். சங்க பதவி மூலம் அந்த நட்பில் சிறு பிளவு ஏற்படுவதையும் விரும்பாதவன். எனவே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி போன்ற அரசியல் நமக்குள் இருந்தால், அதை களைந்து ஒற்றுமை மேம்பட முயற்சிப்போம்.

தலைமையும், செயற்குழு உறுப்பினர்களும் என்னை துணைத்தலைவராக தேர்ந்தெடுத்தபோது, முதலில் மறுத்து, பின் சூழ்நிலை மதித்து சம்மதித்தேன். இந்த பதவியில் எந்த சுகமும் இல்லை, பணிச்சுமை மட்டுமே.’’

இவ்வாறு பார்த்திபன் கூறியுள்ளார்.

Next Story