‘‘பெரிய படங்களுக்கு 3 ஆயிரம் தியேட்டர்கள்; சிறிய படங்களுக்கு 3 தியேட்டர்களா?’’ ஜாகுவார் தங்கம் வேதனை


‘‘பெரிய படங்களுக்கு 3 ஆயிரம் தியேட்டர்கள்; சிறிய படங்களுக்கு 3 தியேட்டர்களா?’’ ஜாகுவார் தங்கம் வேதனை
x
தினத்தந்தி 29 Dec 2018 11:00 PM GMT (Updated: 29 Dec 2018 5:52 PM GMT)

ஏ.சி.மணிகண்டன் இயக்கி, விஜய் பிரபு இசையில், ஆர்.தங்கபாண்டி தயாரித்துள்ள படம், ‘ரூட்டு.’ இந்த பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

தயாரிப்பாளர்கள் ‘கில்டு’ தலைவர் ஜாகுவார் தங்கம், விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:–

‘‘பெரிய கதாநாயகர்களின் படங்களை திரையிடுவதற்கு 3 ஆயிரம் தியேட்டர்கள் கிடைக்கின்றன. ஆனால், சின்ன படங்களுக்கு 3 தியேட்டர்கள்தான் கிடைக்கின்றன. இதுதான் இன்றைய சினிமாவின் அவல நிலை. பெரிய படங்களின் தயாரிப்பாளர்களுக்கு சிறிய பட தயாரிப்பாளர்களின் வலி தெரிய வேண்டும். அதை உணர்ந்து சிறிய பட தயாரிப்பாளர்களுக்கு பெரிய தயாரிப்பாளர்கள் வழி விட வேண்டும்.

கன்னடத்தில் படம் எடுத்தால், அங்கே உள்ள அரசாங்கம் ரூ.10 லட்சம் தருகிறது. அதேபோல் இங்கேயும் நிச்சயமாக சினிமாவை காப்பாற்றும் ஒரு அரசாங்கம் வரும். அந்த அரசாங்கம் தமிழ் படங்களை காப்பாற்றும் என்று கருதுகிறேன்.’’

இவ்வாறு ஜாகுவார் தங்கம் பேசினார்.

இந்த விழாவில் நடிகர் ஆரி பேசும் போது, ‘‘தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரே எம்.ஜி.ஆர்.தான். இப்போது எல்லோருமே எம்.ஜி.ஆர். ஆக வேண்டும் என்று நினைப்பதால்தான் பல பிரச்சினைகள் உருவாகின்றன. சினிமாக்காரர்கள் ஏன் அரசியலுக்கு வர துடிக்கிறார்கள்? என பலரும் கேட்கிறார்கள். சினிமாக்காரர்களை ஒழுங்காக சினிமா எடுக்க விடவில்லை என்பதால்தான் அவர்கள் அரசியலை பற்றி பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்கள் வேலையை செய்ய குறுக்கே நிற்காதீர்கள்’’ என்று கூறினார்.

நடிகர் அப்புக்குட்டி, டைரக்டர்கள் பேரரசு, மணிகண்டன் ஆகியோரும் பேசினார்கள்.

Next Story