பிரபல டைரக்டர் மிருணாள் சென் மரணம்
பிரபல டைரக்டர் மிருணாள் சென் மரணமடைந்தார்.
இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குனர் மிருணாள் சென். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவருக்கு வயது முதிர்வு காரணமாக சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை உடல் நிலை மோசமாகி கொல்கத்தாவில் உள்ள வீட்டில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95.
மிருணாள் சென் 1955-ல் ‘ராத் போர்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ‘மிருகயா’ படம் உலகம் முழுவதும் அவரை அறிமுகப்படுத்தியது. மலைவாழ் மக்களை முதலாளிகள் எப்படி சுரண்டுகிறார்கள் என்பதை தத்ரூபமாக இந்த படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார். மிருகயா படத்தில்தான் மிதுன் சக்கரவர்த்தி அறிமுகமானார்.
நீர் ஆகாஷெர் நீச்சே, பைஷே ஷ்ரவான், புவன் ஷோம், அகா லெர் சந்தானே ஆகிய படங்கள் புகழை பெற்று தந்தன. இவருடைய பல படங்கள் தேசிய விருதுகளை பெற்றன. கேன்ஸ், பெர்லின், வெனிஸ், மாஸ்கோ, சிகாகோ, கெய்ரோ உள்ளிட்ட உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு 12-க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளையும் பெற்றது.
பெங்காலி, இந்தி, ஒடிசா மொழிகளில் 30 படங்களை இயக்கி உள்ளார். ஒக ஊரி கதா என்ற ஒரு தெலுங்கு படத்தையும் டைரக்டு செய்துள்ளார். மிருணாள் சென் திரையுலக சாதனைகளை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன், தாதா சாகேப் விருதுகளை வழங்கியது. நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி டுவிட்டரில், “மிருணாள் சென் மறைவு திரையுலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு” என்று இரங்கல் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story