‘மீ டூ’ விவகாரத்தில் மோதல்? - சவுகார் ஜானகிக்கு சின்மயி பதில்


‘மீ டூ’ விவகாரத்தில் மோதல்? - சவுகார் ஜானகிக்கு சின்மயி பதில்
x
தினத்தந்தி 31 Dec 2018 12:20 AM GMT (Updated: 31 Dec 2018 12:20 AM GMT)

மீ டூ விவகாரம் தொடர்பாக, சவுகார் ஜானகிக்கு சின்மயி பதில் அளித்துள்ளார்.


திரையுலகை ‘மீ டூ’ இயக்கம் சில மாதங்களுக்கு முன்னால் உலுக்கியது. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகளும் பெண் இயக்குனர்களும் பாலியல் புகார் சொல்லி அதிர வைத்தனர். கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்த மீ டூ புகார் குறித்து பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி கருத்து தெரிவித்து இருந்தார்.

அவர் கூறும்போது, “விளம்பரத்துக்காக என்றோ நடந்தது. நடக்காதது. நடந்திருக்க வேண்டியது இதையெல்லாம் இப்போது வெளியே சொல்வது தேவையா? உண்மையில் மீ டூ விவகாரம் யாரை புண்படுத்துகிறது? சொல்பவர்களின் குழந்தை. குடும்பத்தைத்தான் புண்படுத்துகிறது. இலைமறை காயாய் இருந்தால்தான் வாழ்க்கை” என்றார்.

“இது மூலமாக அவர்கள் எதனை நிரூபிக்க பார்க்கிறார்கள். நான் பெண்களுக்காக நிற்கிறவள். ஆனால் இந்த விவகாரத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன். சொல்லக்கூடிய விஷயம் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கலாம். அதனை விளம்பரப்படுத்த வேண்டாம். பெரிய அரசியல்வாதிகளையோ, பிரபலமானவர்களையோ சர்ச்சையில் சிக்க வைப்பதால் மட்டும் பெரிய ஆளாக ஆகிவிட முடியாது. அப்படி செய்வது கேவலம்” என்றும் கண்டித்து இருந்தார்.

இந்த வீடியோ தன்னை அழவைத்ததாக சின்மயி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். “சவுகார் ஜானகி நடந்தது, நடக்காதது என்று வீடியோவில் கூறி இருக்கிறார். நான் நேர்மையாக இருந்ததால் அதை பார்த்ததும் அழுதேன். இந்த துறையில் மோசமானவர்களிடம் இருந்து எத்தனைபேர் பாதுகாக்கப்பட்டு உள்ளனர்? பாதிக்கப்பட்டவர்களுக்கு மீ டூ ஒரு தளமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

Next Story